அதிமுக ஆட்சியில் ஆதீனம் நடந்துபோனது எடப்பாடிக்கு தெரியாதா.. 500 ஆண்டு பாரம்பரியம் அப்ப எங்க போச்சு?
மயிலாடுதுறை: 2020ல் தருமபுரம் மடத்தில் பல்லக்கில் ஆதீனத்தை தூக்கிச் செல்ல கடும் எதிர்ப்பு கிளம்பியதால் தருமபுரம் ஆதீனமே, "பல்லக்கு வேண்டாம் நடந்து செல்கிறேன்" எனக் கூறி நடந்து சென்றார்.
அப்போது அ.தி.மு.க ஆட்சி நடந்த நிலையில், விஷயத்தை பெரிதுபடுத்தாத பா.ஜ.கவினர் தற்போது சர்ச்சைக்கு உள்ளாக்கியிருப்பது விவாதமாகியுள்ளது.
500 ஆண்டுகால பாரம்பரியத்தை தடுக்கக் கூடாது என நேற்று சட்டப்பேரவையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அன்று ஏன் இதைச் சொல்லவில்லை எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை.. திராவிடர் கழகம் எதிர்த்த நிலையில் அரசு அதிரடி
பல்லக்கு சுமக்க தடை
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீன மடத்தில் ஆண்டுதோறும் ஆதீன குரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று `பட்டினப் பிரவேசம்' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அதில் ஆதீனத்தை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம்.
மனிதனை மனிதன் சுமக்கும் இந்த பட்டினப் பிரவேசம் பல்லக்குத் தூக்கும் நிகழ்வுக்குத் திராவிடர் கழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தி.க எதிர்ப்பையடுத்து, தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டினப் பிரவேச நிகழ்வில் பல்லக்கில் ஆதீனத்தை தூக்கிச் செல்ல மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் தடைவிதித்து உத்தரவிட்டார்.
தொடர் சர்ச்சை
தருமபுர ஆதீனம் பட்டினப் பிரவேசத்தின்போது, ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச்செல்ல யார் தடை விதித்தாலும், தடையை மீறி பல்லக்கு தூக்குவோம் என மதுரை ஆதீனம் உள்ளிட்ட ஆன்மீகவாதிகளும், ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி ஆகிய அமைப்புகளும் கூறி வருகின்றன. பா.ஜ.க தலைவர்கள் பலரும், பல்லக்கு தூக்குவதை தடை செய்யக்கூடாது என்றும், நாங்களே வந்து பல்லக்கு தூக்குவோம் என்றும் கூறி வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
500 ஆண்டு பாரம்பரியம்
பல்லக்கு விவகாரம் நேற்று சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. இதுதொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "பழம்பெருமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தில், 500 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடந்து வருகிறது. பக்தர்கள் தங்கள் குருநாதரை பல்லக்கில் அமர வைத்து எந்தவித கட்டாயப்படுத்துதல் இல்லாமல் மனமுவந்து மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் சுமந்து வரும் ஒரு ஆன்மீக நிகழ்வு.
பல நூற்றாண்டுகளாக பட்டின பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சிபுரியும்போது கூட இந்த பட்டின பிரவேச நிசழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டதில்லை. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் இது தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது." எனப் பேசினார்.
2020ல் நடந்து சென்ற ஆதீனம்
2020ஆம் ஆண்டில் தருமபுரம் மடத்தில் பல்லக்கில் ஆதீனத்தை தூக்கிச் செல்ல திராவிடர் கழகம், வி.சி.க அமைப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். கோயிலுக்கு வெளியே தி.க, வி.சி.க போராட்டக்காரர்கள் அதிகளவில் திரண்டு இருந்ததால் தருமபுரம் ஆதீனமே, "பல்லக்கு வேண்டாம் நடந்து செல்கிறேன்" எனக் கூறி நடந்து சென்றார்.
இந்த நிகழ்வின்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு. அப்போது இந்தப் பிரச்சனை பெரிய அரசியலாக்கப்படவில்லை.
Recommended Video
பாஜக அரசியல்
தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு, முக்கியமாக அண்ணாமலை பா.ஜ.க தமிழக தலைவரான பிறகு கோயில்கள், மதம் தொடர்பான விஷயங்கள் பா.ஜ.கவினரால் அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாகவே, தருமபுரம் ஆதீன பல்லக்கு விவகாரமும் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.
தி.மு.கவை எதிர்க்க இந்த விஷயத்தில் அ.தி.மு.கவையும் கூட்டு சேர்த்துக் கொண்டுள்ளது பா.ஜ.க. அதன் காரணமாகவே, தான் முதல்வராக இருக்கும்போது இந்த விஷயத்தை பெரிதுபடுத்தாமல், தற்போது பாரம்பரியம் காக்கப்படவேண்டும் என கொதித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.