உங்களை ஒழித்த அந்த 3 அதிகாரிகள் பதவியில்தான் இருக்கிறார்கள்- சசி குடும்பத்துக்கு எடப்பாடி எச்சரிக்கை
அதிமுக விவகாரங்களில் தலையிட்டால் கடும் விளைவுகளைத்தான் சந்திக்க நேரிடும் என சசிகலா குடும்பத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
சென்னை: ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் உங்கள் குடும்பத்தை பந்தாடிய ஐஏஎஸ் அதிகாரிகளில் 3 பேர் இன்னமும் பதவியில்தான் என்னுடன்தான் இருக்கிறார்கள்; அதனால் அடக்கி வாசியுங்கள் இல்லையெனில் நடவடிக்கைகளை எதிர்கொள்ளுங்கள் என சசிகலா குடும்பத்துக்கு பகிரங்கமாகவே எச்சரிக்கை விடுத்துள்ளாராம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
அண்ணா தி.மு.கவை தங்கள் பிடியில் கொண்டு வருவதற்காக சசிகலா குடும்பத்தினர் நடத்தும் தகிடுதத்தங்கள் குறித்து கொங்கு மண்டல அமைச்சர்கள் எந்தக் கவலையும் அடையவில்லை. இனியும் நீங்கள் அமைதியாக இருக்காவிட்டால், நேரடியான நடவடிக்கைகளை சந்திக்க வேண்டியது வரும் என நேற்று சசிகலா உறவுகளை எச்சரித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்ட இருக்கிறார் முதல்வர் எடப்பாடி. இந்தக் கூட்டத்திற்கு யார் வருகிறார்கள் என்பதை வைத்தே, எடப்பாடி ஆதரவு - எதிர்ப்பு என இரண்டு வகையாகப் பிரிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

கண்டுகொள்ளாத எடப்பாடி
தினகரனின் மாமியார் சந்தானலட்சுமியின் துக்க காரியத்துக்குச் சென்ற கட்சி நிர்வாகிகள் பலரும், அண்ணே...அந்தக் குடும்பத்தை ரொம்ப நாளா தெரியும். துக்க வீட்டுக்குத்தான் போனோம். நீங்க தப்பா எடுத்துக்க வேண்டாம் என எடப்பாடியிடம் தெளிவாக எடுத்துக் கூறிவிட்டனர். இதனை எடப்பாடியும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

தீவிர கண்காணிப்பு
அதேநேரம் தினகரன் விதித்த கெடு முடிவதற்கு மூன்று நாட்களே இருப்பதால், கட்சி நிர்வாகிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த என்ன திட்டம் வகுக்கிறார் என்பதை உளவுத்துறை மூலம் கண்காணித்து வருகிறது முதல்வர் அலுவலகம். அ.தி.மு.கவின் அனைத்து நிர்வாகிகளையும் ஒருங்கிணைப்பது குறித்துத்தான் அமைச்சர்கள் விவாதித்து வருகின்றனர்.

தாவிய தளவாய்
சசிகலா குடும்பத்தின் தயவில் பதவி பெற்றவர்களில் யார் எல்லாம், எடப்பாடி பக்கம் இருக்கிறார்கள் என்பதையும் உன்னிப்பாக கவனிக்கின்றனர். டெல்லி சிறப்பு பிரதிநிதியாக இருக்கும் தளவாய் சுந்தரம், தினகரன் ஆதரவில் பதவிக்கு வந்தவர். அவரும் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள எடப்பாடி பக்கம்தான் நிற்கிறார்.

எடப்பாடி அணியில்...
சசிகலா தரப்பில் உள்ள அனைத்து நிர்வாகிகளையும் எடப்பாடி பக்கம் அணி சேர்க்கும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தினகரனோடு சேர்ந்து கொண்டு திவாகரன் நடத்தும் பத்திரிகையாளர் சந்திப்புகளை முதல்வர் கவனித்துக் கொண்டு வருகிறார்.

பகிரங்க எச்சரிக்கை
அந்தக் குடும்பத்தின் முக்கிய நபரிடம் நேரடியாகப் பேசிய முதல்வர் எடப்பாடியார், கூடுதல் ஆபத்துகளை சுமக்க வேண்டாம். அவர்களை ஒழுங்காக இருக்கச் சொல்லுங்கள். அம்மா இருந்தபோது, அலெக்ஸாண்டர் மோகன், அமல்ராஜ், பாலகிருஷ்ணன், மகேஸ்வரன் உள்ளிட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகளைக் கையில் வைத்துக் கொண்டு உங்கள் குடும்பத்தை ஒழித்துக் கட்டினார். இந்த அதிகாரிகளில் ஒருவர்தான் ஓய்வு பெற்றுவிட்டார்.

அந்த 3 அதிகாரிகள்
எஞ்சிய மூன்று பேரும் பதவியில்தான் இருக்கிறார்கள். இதனை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஒவ்வொருவர் மீதான வழக்குகளின் ஃபைல்கள் எங்கு இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியும். கட்சி அலுவலகத்துக்குள் வர நினைத்தால், என்னுடைய உண்மையான முகத்தை நீங்கள் பார்ப்பீர்கள்' என எச்சரித்தாராம் எடப்பாடி.

அதிர்ச்சியில் சசி குடும்பம்
இப்படியொரு நேரடி தாக்குதலை சசிகலா குடும்பத்தினர் எதிர்பார்க்கவில்லை. எனவேதான், வேறு வழியில்லாமல் நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி நகர்கிறோம்; கட்சியை பலப்படுத்துகிறோம் என்றெல்லாம் தினகரன் பேசிக் கொண்டிருக்கிறார் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications