அரசியல் கூட்டங்களுக்கு அழைத்து வரப்படும் ஏழை மக்கள்... 200 ரூபாய்க்கு ஆசைப்பட்டு உயிரை விடும் அவலம்
சென்னை: கோடை வெயிலின் உக்கிரம் மக்களின் உயிரை குடிக்கும் அளவிற்கு அதிகரித்துவிட்டது. தேர்தல் காலம் என்பதால் இளம் பிஞ்சுகள் முதல் வீட்டில் முடங்கிக் கிடக்கும் முதியவர்கள் வரை என தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட்டம் சேர்க்கும் கும்பல் அதிகரித்து வருகிறது. ஆளுக்கு 200 ரூபாய், 500 ரூபாய், பிரியாணி பொட்டலம், ஆண்கள் என்றால் கூடவே குவார்ட்டர் என்று ஆசை வார்த்தைக்கூறி அழைத்துச் செல்லும் கும்பல், அவர்களை வெயிலில் வாட்டி எடுத்து கடைசியில் உயிரையே எடுத்து விடுகின்றனர் என்பதுதான் சோகம்.
வெயில் காலத்தில் எந்த வித வசதியும் செய்யாமல் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யும் அரசியல் கட்சியினர், விவிஐபிக்களுக்கு மட்டும் வசதியான மேடையை அமைத்து விடுகின்றனர். தொண்டர்கள்தான் வெயிலில் காய்ந்து கருகவேண்டியுள்ளது. தொண்டர்களாவது கருகலாம், அது அவர்கள் விரும்பி ஏற்கும் கஷ்டம். ஆனால், ஏழைகளை காசுக்கும் சாப்பாட்டு பொட்டலத்துக்கும் விலைக்கு வாங்கி கூட்டிச் சென்று கொல்வது தான் மகா பாவம். இந்த பாவத்தை சிலர் தவிர மற்ற எல்லா பெரிய கட்சிகளும் செய்கின்றன. இதில் எந்த ஒரு கட்சியையும் மட்டும் குறிப்பிட்டு குறை சொல்லிவிட முடியாது.
விருத்தாசலத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் பிரசாரத்துக்காக பல மணி நேரம் வெட்ட வெளியில் காத்திருந்த பெண்கள் வெயில் தாங்காமல் வெளியேற முயன்றபோது முடியாமல் 17 பேர் மயக்கமடைந்தனர். இதில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்து விட்டனர். சிகிச்சை பெற்று வரும் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்பதுதான் சோகம்.
சென்னையில் நடைபெற்ற கூட்டம் மாலை நேரத்தில் நடைபெற்றது என்பதால் சிக்கல் இல்லை. ஆனால் நேற்று பிற்பகல் 3 மணிக்கு விருத்தாசலத்தில் நடந்த கூட்டத்திற்கு 11 மணியில் இருந்தே கூட்டத்தை கூட்டி வந்து பட்டியில் அடைத்தது போல அடைத்து விட்டனர் என்பதுதான் கொடுமை.
இயற்கை உபாதைகளை வெளியேற்றக் கூட வழியில்லாமல் அடங்கிக் கிடந்த பெண்கள்தான் ஒரு கட்டத்தில் வெயிலின் உக்கிரம் தாங்காமல் வெளியேற முயற்சி செய்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஏராளமான பெண்கள் மயங்கி சாய்ந்தனர். ஆனாலும் அலட்சியத்துடனேயே அவர்களை கையாண்ட அதிமுகவினர் எந்த வித முதலுதவி சிகிச்சையும் உடனடியாக செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கூட்டத்தில் தள்ளு முள்ளு
ஜெயலலிதா மதியம் 2.30 மணிக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கினார். 3 மணிக்கு மேடை ஏறிய ஜெயலலிதா வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேச தொடங்கினார். அப்போது, வெயில் தாங்காமல் பலர் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றனர். இதனால் நெரிசல் ஏற்பட்டது. பெண்கள் இருக்கும் பகுதிக்குள்ளும் ஆண்கள் புகுந்ததால் பதற்றம் உருவானது.
ஜெயலலிதா பேச்சு
கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 19 பேர் மயக்கமடைந்து கீழே விழவே, கூட்டத்தில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் அங்கு வந்தனர். இந்த களேபரம் எதையும் கவனிக்காமல் தொடர்ந்து ஜெயலலிதா பேசிக்கொண்டு இருந்தார். இதனால் மயங்கி கிடந்தவர்களை மீட்பதற்கு காலதாமதம் ஏற்பட்டது.
ஜெயலலிதா கிளம்பிய பிறகுதான் சிகிச்சை
ஜெயலலிதா பேசி முடித்துவிட்டு காரில் ஏறி ஹெலிகாப்டர் தளத்துக்கு புறப்பட்ட பிறகே மயங்கி கிடந்த 19 பேரையும் போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிதம்பரம் 31வது வட்டம் தெற்கு வாணியதெருவை சேர்ந்த அதிமுக உறுப்பினர் கருணாகரன், 61 என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
காவலர்களும் மயக்கம்
பெண் காவலர் விஜயசாந்தி, ஜெயங்கொண்டம் ராதாகிருஷ்ணன் (42) ஆகியோர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராதாகிருஷ்ணன் இறந்தார். மயக்கமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பதில் ஏற்பட்ட தாமதமே அப்பாவித் தொண்டர்கள் இருவரின் உயிர் பறிபோக காரணமாக அமைந்துள்ளது.
பச்சிளம் குழந்தைகள்
விருத்தாசலம் பிரச்சாரக்கூட்டத்தில் பச்சிளம் குழந்தைகளும் பரிதவித்துத்தான் போயினர். வெயிலின் கொடுமை தாங்காமல் பலரும் தலையில் தண்ணீரை கொட்டிக் கொண்டதையும் காணமுடிந்தது. வியர்வை ஆறாக பெருக்கெடுக்க ஆண்கள் சட்டையை கழற்றி விட்டு விசிறிக்கொண்ட காட்சியையும் காண முடிந்தது.
அனைவரும் ஒன்றுதான்
முன்பெல்லாம் பிரச்சார பொதுக்கூட்டங்கள் விடிய விடிய நடைபெறும். ஒலிபெருக்கிகளை வைத்து பலரின் தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டிருப்பார்கள். இப்போது 10 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு உள்ளது. இதனால் பலரும் நிம்மதியாக உறங்க முடிகிறது.
விடுமுறையில் மாணவர்கள்
பள்ளி விடுமுறைக் காலம் என்பதால் பல அரசியல் கட்சியினரும் மாணவர்களைக் கூட காசு கொடுத்து பிரச்சாரக்கூட்டங்களுக்கு அழைத்து வரும் கொடுமை நடக்கிறது. அதிமுகவினர் மட்டுமல்ல அனைத்து அரசியல் கட்சியினருமே இதனை பின்பற்றுகின்றனர்.
தேர்தல் ஆணையம் உத்தரவிடுமா?
அரசியல் கட்சியினர் நடத்தும் பிரச்சாரக் கூட்டங்களை வெயில் இல்லாத நேரமாக பார்த்து வைப்பதுதான் சரியானது. இந்த கூட்டத்திற்கு முதியவர்களையும், பச்சிளம் குழந்தைகளையும், 15 வயதிற்குட்பட்ட மாணவர்களையும் அனுமதிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிடவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
உயிரை விடலாமா?
அரசியல்வாதிகள் ஆட்சியைப் பிடிக்க ஏசி கேரவன் வேனிலும், ஹெலிகாப்டரிலும் பறந்து வந்து கூட்டம் போட்டு பேசுகின்றனர். ஆனால் அப்பாவி மக்கள்தான் அரசியல்வாதிகள் கொடுக்கும் 200 ரூபாய்க்கும், பிரியாணிக்கும் ஆசைப்பட்டு இப்படி உயிரை விடலாமா என்பதே சமூக ஆர்வலர்களின் கேள்வியாகும்.