பூசி மெழுகி தேர்தலை நடத்தும் ஆணையம்... இது தான் ஜனநாயகமா?
ஆர்கே நகரில் ஜனநாயக முறைப்படி தான் தேர்தல் நடக்கிறதா அல்லது பணநாயக முறைப்படி தேர்தல் நடக்கிறதா என்ற விவாதத்திற்கு முடிவு காணாமலே நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
Recommended Video
சென்னை : ஆர்கே நகரில் பணப்பட்டுவாடாவை சமாளிக்க முடியவில்லை, என்றாலும் தேர்தலை நிறுத்தினால் ஆணையத்திற்கு அவப்பெயர் என்பதால் நிச்சயம் இந்த முறை தேர்தலை நடத்தி விட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தின் ஒரு தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கே ஏன் இத்தனை திண்டாட்டம் என்ற கேள்வி தான் எல்லோர் மனதிலும் எழுகிறது.
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இந்திய தேர்தல் ஆணையத்தால் மறக்க முடியாத தொகுதியாக என்றுமே அதன் வரலாற்றில் இருக்கும். திருமங்கலம் இடைத்தேர்தல், தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தல்களையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க முடியாமல் திணறுகிறது தேர்தல் ஆணையம்.
கடந்த ஏப்ரல் மாதம் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து கிடைத்தன் அடிப்படையில் தேர்தலை நிறுத்தியது ஆணையம். ஆனால் அப்போதென்னவோ 89 கோடி பணம் வாக்காளர்களுக்கு விநியோகிக்க ஒவ்வொரு அமைச்சரின் பெயரில் அசைன் தான் செய்யப்பட்டிருந்தது.
இந்த முறை தேர்தலில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் நடமாட்டம் ஆர்கே நகரில் வெள்ளமெனப் பாய்ந்ததை கண்கூடாகவேப் பார்க்க முடிந்தது. அதிகாரப்பூர்வமாக ஆர்கே நகரில் 30 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆளும் கட்சி, சுயேச்சை வேட்பாளர் என ஆளாக்கு போட்டி போட்டி சுமார் ரூ. 120 கோடி வரை பணத்தை வாரி இறைத்துள்ளனர் என்று புகார் சொல்லப்படுகிறது.
ஆர்கே நகரில் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது வேட்பாளர்களின் கவுரப் பிரச்னையாகிவிட்டது. தேர்தல் ஆணையத்திற்கும் அப்படியான ஒரு நிலைமை தான் வந்துவிட்டது. இந்த முறையும் பணப்பட்டுவாடாவை காரணம் காட்டி தேர்தலை நிறுத்தினால் அதன் பின்னர் தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கை இழந்து போய்விடும் என்று நினைக்கிறது ஆணையம்.
எனவே எப்பாடுபட்டாவது இந்த முறை தேர்தலை நடத்திவிட வேண்டும் என்பது தான் ஆணையத்தின் நோக்கமாக உள்ளது. வேட்பாளர்கள் ஏற்கனவே பணப்பட்டுவாடா செய்துவிட்ட நிலையில் இனி அங்கு பணப்பட்டுவாடா செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.
ஆதாரங்களுடன் வெளியான பணப்பட்டுவாடா புகார்களுக்கு தேர்தல் அதிகாரிகளிடம் முறையான விளக்கம் இல்லை. அவர்களின் நோக்கம் எல்லாம் எப்படியாவது நாளை மறுதினம் வாக்குப்பதிவை நடத்தி விட வேண்டும் என்பது தான். எது எப்படியோ பணப்பட்டுவாடா என்பது ஒழிக்கப்படாமலே நாளை மறுதினம் தேர்தல் நடத்தப்படுகிறது என்பது தான் இப்போதைய நிலைமையாக இருக்கிறது.