தேர்தல் செலவுக் கணக்குகளை காட்டாவிட்டால் 3 ஆண்டு போட்டியிட “தடா”
கோவை: செலவுக் கணக்குளை குறிப்பிட்ட தேதியில் சமர்பிக்காவிட்டால் வேட்பாளர்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டி இட முடியாது என்று தேர்தல் ஆணையம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
"தேர்தல் விதிமுறைகளை மீறி செலவுக் கணக்குகளை நிர்ணயிக்கப்பட்ட நாளில், சரியான நடைமுறைப்படி சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு போட்டியிட தடை விதிக்கப்படும்" என தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் வேட்பாளர்கள் செலவுக் கணக்கு சமர்பிக்க மும்முரம் காட்டி வருகின்றனர்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
லோக்சபா தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல், பரிசீலனை, வாபஸ் ஆகியவற்றை கடந்து கடைசியாக அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்களோடு பட்டியலிட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. கூடவே வேட்பாளர்களுக்கு கண்டிப்பான விதிமுறைகளையும் தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
நடவடிக்கை எடுக்கப்படும்:
"வேட்பாளர்களும், அவர்களது பிரதிநிதிகளும் தேர்தல் விதிமுறைப்படி செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் வாயிலாக தேர்தலில் போட்டியிட முடியாத நிலை கூட ஏற்படலாம்" என எச்சரிக்கை அறிவிப்புகளை தேர்தல் பிரிவு அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
பேனர் வைக்காதீர்கள்:
வழிபாட்டுத்தலங்களில் பிரசாரத்தை தவிர்க்க வேண்டும். நகரில் பெயிண்ட்டிங் மற்றும் பேனர் வைக்கக்கூடாது.கிராமங்களில் அனுமதி பெற்று வரையலாம். ஸ்பீக்கர் பயன்படுத்தினால் செலவுக்கணக்கில் வரவு வைக்க வேண்டும். டைரி , காலண்டர், ஸ்டிக்கர், கீ செயின் வழங்கக்கூடாது.
சொந்த வாழ்க்கை பற்றி பேசாதே:
திருமணம், கிடா வெட்டு, காதுகுத்து, நலுங்கு நிகழ்ச்சியில் பிரசாரம் செய்யக்கூடாது. திருவிழா, மஞ்சள் தண்ணீர் ஊற்றும் நிகழ்வுகளில் தனி மனிதராக பங்கேற்கலாம். அங்கும் சகாக்களை திரட்டி வேட்பாளரோ, அவரது ஆதரவாளர்களோ பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது. வேட்பாளரின் சொந்த வாழ்க்கை பற்றி பேசுவதும் விதிமீறல் தான்.
"டிவி" பிரச்சாரம் கூடாது:
தேர்தல் அன்று ஓட்டுச்சாவடிக்கு 200 கிலோ மீட்டர் தொலைவில் வாக்காளர் "சிலிப்" கொடுத்து பிரசாரம் செய்யலாம். ஆனால் அங்கு "டிவி" வைத்து விளம்பரம் செய்யக்கூடாது. வாக்காளர்களை வாகனங்களில் அழைத்துவரக் கூடாது; விமர்சிக்கவும் கூடாது.
விண்ணப்பம் அவசியம்:
பொதுக்கூட்டம், பேரணி, பிரசாரம் ஆகியவற்றுக்கு மூன்று நாள் முன்னதாக ஒற்றைச்சாளர முறையில் விண்ணப்பிக்க வேண்டும். வேட்பாளரோ, அவரது ஆதரவு பெற்றவரோ சட்டை , சேலை, வேஷ்டி, மது உள்ளிட்டவற்றை மொத்தமாக எடுத்துச்செல்லக்கூடாது.
முறையாக சமர்ப்பிக்க வேண்டும்:
செலவுக்கணக்குகளை முறையாக எழுதி நிர்ணயிக்கப்பட்ட நாளில் சமர்ப்பிக்கப்படாவிட்டால் மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம் படி அந்த வேட்பாளர் அடுத்து வரும் மூன்றாண்டுகளுக்கு போட்டியிட தேர்தல் கமிஷன் தடைவிதிக்கும். அதனால் வேட்பாளர்கள் செலவு கணக்குகளை சரியான முறையில் சமர்பிப்பது அவசியம்
கலக்கும் "கலர்கலர்" கணக்கு:
வேட்பாளர் செலவுகளை அன்றாடம் பதிவு செய்ய வேண்டும். அன்றாட செலவினங்களுக்கு வெள்ளை நிறத்திலும், ரொக்கச் செலவுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், வங்கி வாயிலான செலவினங்களுக்கு மஞ்சள் நிறத்திலும் பதிவேடுகள் வேட்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளன. அதில் முறையாக எழுதி சமர்ப்பிக்க வேண்டும்.
குழுமுன் கணக்கு:
செலவுக்கணக்குகளை மூன்று நாட்களில் தேர்தல் நடத்தும் அலுவலர் பொது பார்வையாளர், கணக்குக்குழு, பார்வையாளர் என்று மூன்று தரப்பினர் முன்னிலையில் சமர்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெள்ளை நிற பூத் சிலிப்:
தேர்தலன்று ஓட்டுச்சாவடிக்கு 200 மீட்டர் தொலைவில் டேபிள், ஒரு சேருடன் இருவர் மட்டும் இருக்க வேண்டும். சின்னம் இல்லாத வெள்ளை நிற "பூத்சிலிப்'" மட்டும் கொடுக்க வேண்டும். பூத் ஏஜன்ட்டாக ஒருவர் மட்டும் அமரலாம்.
ஏஜெண்ட் வெளியில் செல்ல கூடாது:
மாற்று நபர் வெளியில் காத்திருக்க வேண்டும். வாக்காளர் பட்டியலை வெளியே எடுத்து செல்லக்கூடாது. மாலையில் ஏஜென்ட் வெளியில் செல்லக்கூடாது.
மூன்று வாகனங்களே அனுமதி:
தேர்தல் அன்று வேட்பாளர் மற்றும் அவரது சகாக்கள் மூன்று வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.