நாய்க்குட்டி போல் அன்பாக பழகும்.. மரணமடைந்த யானை ராஜேஸ்வரி குறித்து பக்தர்கள் கண்ணீர் மல்க உருக்கம்
பாசத்துடன் பழகிய சேலம் சுகவனேஸ்வரர் கோவில் யானை ராஜேஸ்வரி உயிரிழந்த சம்பவம் பக்தர்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
Recommended Video
சேலம்: பாசத்துடன் பழகிய சேலம் சுகவனேஸ்வரர் கோவில் யானை ராஜேஸ்வரி உயிரிழந்த சம்பவம் பக்தர்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
சேலம் சுகவனேஸ்வரர் கோவில் யானை ராஜேஸ்வரி 1976ஆம் ஆண்டு முதுமலையில் பிறந்தது. தனது 5 வயதில் இந்த யானை சேலம் சுகவனேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
கடந்த 31 ஆண்டுகளாக இந்த யானை சுகவனேஸ்வரர் கோவிலில் சேவையாற்றிவந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புத்துணர்வு முகாமுக்கு அழைத்து செல்ல லாரியில் ஏற்றப்பட்ட போது லாரியில் இருந்து குதித்தது.
காலில் முறிவு
இதில் யானைக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 3 காலில் நின்றபடியே யானை பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது.
யானைக்கு சிகிச்சை
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து கோவிலுக்கு சொந்தமான கோரிமேடு பகுதியில் உள்ள நந்தவன தோட்டத்தில் வைத்து யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
படுத்த படுக்கை
இந்த நிலையில் வயிறு, கால், மூட்டு உள்ளிட்ட பகுதிகளில் புண் ஏற்பட்டு, நாளுக்கு நாள் புண் பெரிய அளவில் அதிகரித்தது. கால்நடை துறை டாக்டர்கள், வனத்துறை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். எனினும் முன்னேற்றம் இல்லை. யானை எழுந்திரிக்க முடியாமல் படுத்த படுக்கையாகிவிட்டது.
தந்தம் உடைந்தது
கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி யானையின் உடல் நிலை மிகவும் மோசமானது. இதனை கண்ட அறநிலைய துறை அதிகாரிகள் ஜே.சி.பி.எந்திரம் கொண்டு அந்த யானையை தூக்கி நிறுத்த முயற்சித்தனர். அப்போது யானையின் தந்தம் மற்றும் வலது கால் உடைந்து யானை மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.
ஆங்கிலம், இயற்கை மருத்துவம்
கடந்த சில நாட்களாக யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக ஆங்கில மருத்துவம், இயற்கை மருத்துவம் ஆகிய 2 வகையான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்தது. வெளிநாட்டில் இருந்தும் மருத்துவர்கள் சிகிச்சையளித்து வந்தனர்.
ஹைகோர்ட்டில் மனு
யானையின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாததால் யானையை கருணை கொலை செய்ய வேண்டும் என சென்னை, கோட்டூரை சேர்ந்த விலங்குகள் நல அலுவலர் முரளிதரன் என்பவர் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
ஹைகோர்ட் அனுமதி
மனுவை விசாரித்த ஹைகோர்ட்டு 48 மணி நேரத்தில் யானையின் உடல் நிலையை பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் யானையின் உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை எனில் கருணை கொலை செய்து விடலாம் என உத்தரவிட்டது.
யானை ராஜேஸ்வரி மரணம்
ஆனால் கருணை கொலை செய்யும் முன்பாகவே யானை இன்று மரணமடைந்து விட்டது. 42 வயதான ராஜேஸ்வரி யானை கடந்த 36 ஆண்டுகளாக சுகவனேஸ்வரர் கோவிலில் ஒரு குழந்தையை போல் இருந்ததாக பக்தர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
நாய்க்குட்டி போல் பழகும்
இந்த ராஜேஸ்வரி யானை வீட்டில் வளர்க்கும் நாய்க்குட்டியை போல் அனைவரிடமும் பாசமாக பழகும் என்றும் குழந்தைகளை அரவணைத்து செல்லும் என்றும் ஒரு முறை பார்த்தாலே எளிதில் அடையாளம் காணும் என்றும் பக்தர்கள் கண்ணீருடன் உருக்கமாக தெரிவித்துள்ளனர்.