மதுரையில் பொறியியல் பட்டதாரி தற்கொலை.. நடந்தது என்ன ? திடுக்கிடும் தகவல்களை விளக்கும் மாணவர் குழு
மதுரை: மதுரை, அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த பொறியியல் மாணவர் லெனின் பெற்ற கல்விக்கடனுக்காக அவரின் குடும்பத்தினரை தொலைபேசியில் ரிலையன்ஸ் கும்பல் மிரட்டியதையடுத்து அவர் தற்கொலை செய்துகொண்டதன் பின்னணி குறித்து அகில இந்திய மாணவர் கழகத்தினர் ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக, அகில இந்திய மாணவர் கழகம் சார்பில் மூன்று பேர் கொண்ட குழு லெனின் குடும்பத்தாரைச் சந்தித்துப் பேசியதுடன், தற்கொலைக்கான பின்னணியையும் விசாரித்து அறிந்தனர். அந்தக் குழுவின் அறிக்கை விவரம்:
மதுரை அனுப்பானடி பகுதியில் தன் மனைவியோடு வாழ்ந்து வந்த கதிரேசன், கொத்தனார் தொழில் செய்து வந்தவர். இவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். கொத்தனாராகவே தன் வாழ்க்கையை நகர்த்திய கதிரேசன் தன் மகனை கட்டிட பொறியாளராக ஆக்க கனவு கண்டு மதுரை அழகர்கோயில் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படிப்பில் தன் மகன் லெனினை சேர்த்து விட்டார்.
பெரும் அலைக்கழிப்புகளுக்கு பின் மதுரை மேல வெளி வீதியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் தன் மகனுக்கு கல்வி கடன் பெற்றார். நான்கு ஆண்டுகளுக்கு(2010-2014) சேர்த்து வங்கியில் அவர் பெற்ற மொத்த கடன் தொகை 1.90 லட்சம் ஆகும். லெனின் படிப்பை முடித்து விட்ட சூழலிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் முயற்சி எடுத்தும் வேலை ஏதும் கிடைக்கவில்லை.
இதனால் தான் பெற்ற வங்கி கடனை உரிய நேரத்தில் திருப்பி செலுத்த இயலவில்லை. மாணவர் லெனினின் குடும்பம் தலித் பிரிவை சார்ந்தவர்கள் என்பதும் இங்கே குறிப்பிடதக்கது. ,இருந்தபோதும் எஸ்சி பிரிவு மாணவர்கள் தனியார் தொழில் கல்லூரியில் படிக்கும்படி ஆகும்போது அரசு அளிக்கும் கல்வி உதவித் தொகை (அரசாணை 92) லெனினுக்குக் கிடைக்கவில்லை.
லெனின் அரசாணை 92 ன் படியான அரசின் உதவித் தொகையைப் பெற்றிருந்தால் கல்விக் கடன் பெற்றிருக்க மாட்டார். கல்விக் கடன் பிரச்சனை கொந்தளிக்கும் நிலையில் இருப்பதை அ.இ.அ.திமுக புரிந்துகொண்டுதான் அதனை ஒரு தேர்தல் வாக்குறுதியாக அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் மௌனம் சாதிக்கிறது.
இந்நிலையில் கடந்த 6-5-2016 அன்று ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து லெனின் வீட்டிற்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அதில் லெனின் செலுத்த வேண்டிய கல்வி கடனை 6 மாத காலத்திக்குள் செலுத்த வேண்டும் எனவும், இனி தாங்கள் தான் அக்கல்வி கடனை வசூலிக்க பொறுப்பானவர்கள் என்றும், கடனை குறித்த காலத்தில் செலுத்த தவறினால் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிட பட்டுள்ளது. கூடுதலாக லெனின் பெற்ற 1.90 லட்ச ரூபாய் கல்வி கடனுக்கான வட்டியையும் சேர்த்து 2,48,623 ரூபாய் தொகையை கட்ட சொல்லி அறிவுறுத்தி இருந்தது.
இந்த கடிதம் லெனின் கையில் தான் முதலில் வந்துள்ளது, அதை படித்ததும், ரிலையன்ஸ் கம்பெனியிடமிருந்து ஏன் கடிதம் வருகிறது என்றோ, வட்டி தொகை 50000 ரூபாய்க்கு மேல் அதிகரித்தது எப்படி என்றோ , சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதை சொல்கிறார்கள் என்றோ, அக்கடிதத்தில் குறிப்பிட்டபடி 15 நாட்களுக்குள் அவ்வளவு பெரிய தொகையை எப்படி செலுத்துவது என்றோ , லெனினுக்கு ஒன்றுமே புரியவில்லை, வீட்டில் நிலவும் வறுமை மற்றும் தனக்கிருந்த பயம் காரணமாக வீட்டில் ஏதும் சொல்லாமல் அக்கடிதம் வந்த செய்தியை லெனின் குடும்பத்தாரிடமிருந்து மறைத்திருக்கிறார்.
இதற்கு இடையில் கடந்த ஒரு மாதமாக லெனினின் தந்தை கதிரேசனின் செல்பேசிக்கு கல்விக்கடனைத் திரும்பச் செலுத்தச் சொல்லி பல்வேறு எண்களில் இருந்து தொடர் அழைப்புகள் வந்துள்ளன. இதை தன் மகனிடமும் பகிர லெனின் கூடுதலாக அச்சமுறத் தொடங்கியுள்ளார். தவணை முறையில் கடனைக் செலுத்துமாறும் முதல் தவணை தொகையாக, உடனே 50000 ரூபாய் செலுத்துமாறு யார் என்று தெரியாத நபர்கள் தொடர்ந்து கறாரான முறையில் செல்பேசி வாயிலாக மிரட்டத்தொடங்க தந்தையும் மகனும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
லெனின் தற்கொலை செய்து கொள்வதறக்கு இரண்டு நாட்களுக்கு முன்புகூட அப்படியொரு அழைப்பு லெனினின் செல்பேசி எண்ணுக்கே வந்துள்ளது. யாரோ போனில் மிரட்டுவது குறித்தும், அப்பாவின் கையறு நிலை குறித்தும், தான் இந்த குடும்பத்திற்கு அவமானமாகவும் சுமையாகவும் இருப்பதாக கருதி 15-7-2016 அன்று இரவு அனைவரும் தூங்கிய பிறகு, லெனின் தன் வீட்டு மின்விசிறியில் பரிதாபமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
* லெனினின் தந்தையை சந்தித்து பேசியபொழுதுதான் ரிலையன்ஸ் கம்பனியிடமிருந்து வந்த கடிதம், தொடர் செல்பேசி அழைப்புகள் குறித்து விரிவாக அறிந்து கொண்டோம். தன் குடும்பத்தின் முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவனை, தன் மகனை ஒரு கட்டிடப் பொறியாளராக்கிப் பார்க்கவேண்டும் என்கிற தன் பெரும் கனவை எல்லாம் ஒரே நொடியில் அழித்த ரிலையன்ஸ் மற்றும் எஸ்பிஐ வங்கியின் அத்துமீறிய செயல்பாடுகள் மீது கடும் கோபமுடன், அதைவிட தன் ஒரே மகனை இழந்த பெரும் வேதனையுடன் கதிரேசன் நம்மிடம், 'ரிலையன்ஸ் கம்பனி'காரன் யாருங்க பேங்க்,ல நாங்க வாங்குன கடனை வசூலிக்குறதுக்கு..?' என்று கேட்டார்.. கதிரேசன் மட்டுமல்ல, அங்கு இருந்த ஒவ்வொரு உறவினரும் கடும் கோபத்துடன் அரசை நோக்கியும் எஸ்பிஐ மற்றும் ரிலையன்ஸ்'யை நோக்கியும் சரமாரியாக கேள்விகளை முன் வைத்தனர்.
* இதற்கிடையில் இலெனின் தற்கொலை செய்துகொண்டதைக் கேள்விப்பட்டு அங்கு வந்த அவனியாபுரம் காவல்துறையினர், இந்த விஷயத்தை மூடிமறைக்க தமிழக அரசைக் காக்க, இலெனின் மரணத்திற்கு காரணமாக அவர் குடும்பத்தினர் சொன்ன காரணத்தை ஏற்க மறுத்து வயிற்றுவலி தாங்காமல் தற்கொலை செய்துகொண்டதாக கூறும்படி வற்புறுத்தியுள்ளனர். லெனின் குடும்பத்தார் அதை கடுமையாக மறுக்கவே இந்த செய்தி 17-7-2016 நாளிதழ்களில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
லெனினின் குடும்பத்தினரிடம் நீங்கள் அரசிடம் என்ன கோரிக்கை வைக்கிறீர்கள் என்று கேட்க, "என் மகனே போய்ட்டான் இனி எனக்கு என்ன வேணும், என் மகன் மாதிரி இன்னொரு லெனின் இனி சாக கூடாது, படிக்குற பசங்களோட இந்த லோன்'யை எல்லாம் இந்த அரசாங்கத்தை தள்ளுபடி பண்ண சொல்லுங்க, அது போதும், இல்லன்னா இது மாதிரி நெறைய உசுரு போய்டும்" என்று குரல் உடைய லெனினின் தந்தை கதிரேசன் நம்மிடம் கூறினார்."
இவ்வாறு மாணவர் கழகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், " கல்விக் கடன் நெருக்கடி காரணமாக தற்கொலை செய்துகொண்ட லெனின் அவர் குடும்பத்தின் ஒரே வாரிசு, என்பதை மனதில்கொண்டு அவர் குடும்பத்திற்கு ரூபாய் 25 லடசம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.