யாசினின் ஆசை நிறைவேற்றம்... தங்கச் சங்கிலி பரிசளிப்பு... படிக்க வைக்கவும் உறுதியளித்த ரஜினி
எனக்கு உதவியெல்லாம் வேண்டாம். ரஜினியை நேரில் பார்க்க ஆசை என்று ஈரோடு சிறுவன் தனது ஆசையை தெரிவித்துள்ளார்.
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.50 ஆயிரம் பணத்தை போலீஸிடம் ஒப்படைத்த சிறுவனின் ஆசையை ரஜினி நிறைவேற்றினார்.
ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பாட்சா. இவரது மனைவி அப்ரோஜ் பேகம். இவர்களுக்கு யாசின் என்ற மகன் உள்ளார். இவர் அரசு பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது சாலையோரத்தில் ஒரு கைப்பை கிடைப்பதை கண்டார். இதையடுத்து அதை திறந்து பார்த்த போது அதில் நிறைய பணம் இருந்ததை கண்டு திடுக்கிட்டார்.
யாசின் முன்னிலையில்
இதையடுத்து அந்த பையை எடுத்து சென்ற யாசின் தனது ஆசிரியரிடம் தெரிவித்தார். அவர் போலீஸை வரவழைத்து யாசின் முன்னிலையில் அந்த பணத்தை ஒப்படைத்தார்.
சிறுவன் நேர்மை
இந்த பணத்தை பெற்றுக் கொண்ட மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் சிறுவனை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து அவரது நேர்மையை பாராட்டினார். தனது குடும்பம் வறுமையில் வாடும் நிலையிலும் அந்த சிறுவன் நேர்மையாக இருந்ததை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ரஜினி மக்கள் மன்றம்
குஷ்புவும் சிறுவனை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக யாசினின் குடும்பத்தை நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அப்போது அவர்களுக்கு உதவி செய்ய முன் வந்தனர்.
ரஜினியை பார்க்க வேண்டும்
ஆனால் சிறுவனோ தனக்கு எந்த உதவுகளும் வேண்டாம் என்றார். இதுகுறித்து சிறுவன் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் கூறுகையில் தனக்கு எந்த உதவிகளும் வேண்டாம். நடிகர் ரஜினிகாந்தை நேரில் பார்க்க வேண்டும். அவரின் தீவிர ரசிகன் என்று தெரிவித்தார். அதற்கு ஏற்பாடு செய்வதாக ரஜினி மன்ற நிர்வாகிகள் சிறுவனிடம் உறுதியளித்தனர்.
தங்க சங்கிலி பரிசளிப்பு
இதையடுத்து சிறுவனின் ஆசை ரஜினியின் காதுகளுக்கு சென்றது. இதைத் தொடர்ந்து ரஜினி, அந்த சிறுவனை அழைத்து வருமாறு கூறினார். இதையடுத்து யாசின் தனது குடும்பத்தினருடன் சென்று ரஜினியை சந்தித்தார். அப்போது சிறுவனை பாராட்டிய ரஜினி, அவருக்கு தங்க சங்கிலியை பரிசளித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் ரஜினி கூறுகையில் சிறுவன் முகமது யாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன். அவர் என்ன படிக்க நினைத்தாலும் அதனையே படிக்க வைப்பேன் என்றார்.