காவிரிப் பிரச்சினைக்கு ஜெயலலிதாவின் மெத்தனப் போக்கே காரணம் - ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈரோடு: காவிரிப் பிரச்சினை இந்த அளவுக்குப் பெரிதாக முதல்வர் ஜெயலலிதாவின் மெத்தனப் போக்கே காரணம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகி விட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
ஈரோடு வந்த அவர் அங்கு அளித்த பேட்டியின்போது முழுக்க முழுக்க ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசினார். அதேசமயம், கர்நாடகத்தில் நடந்த வன்முறையையும், தமிழர்கள் தாக்கப்பட்டதையும் கண்டிப்பதாக ஒரு வார்த்தை கூட இளங்கோவன் கூறவில்லை.
செய்தியாளர்களுக்கு இளங்கோவன் அளித்த பேட்டியிலிருந்து...

உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்கிறோம்
சுப்ரீம் கோர்ட் தமிழ்நாட்டுக்கு காவிரி தண்ணீரை திறந்து விட வேணடும் என உத்தரவிட்டது. இப்போது மேலும் 12 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட உத்தரவிட்டதும் வரவேற்கத்தக்கது. காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக கர்நாடகா தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள். பெங்களூரு, மாண்டியா, மைசூரு போன்ற இடங்களில் தமிழர்கள் மீதான தாக்குதல் நடந்து வருகிறது. 45 தமிழக பஸ்களும் 100-க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகளும் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன.

அவர் பாட்டுக்கு இருக்கிறார் ஜெயலலிதா
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சேதம் அடைந்தவர்களுக்கும் மத்திய அரசையும், கர்நாடக அரசையும் தமிழக முதல்வர் அணுகி நஷ்ட ஈடு பெற்று தர வேண்டும். முதல்- அமைச்சர் வழக்கம் போல் பிரதமருக்கு கடிதம் எழுதி விட்டு அமைதியாக உள்ளார். காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக தமிழக முதல்வர் சர்வ கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்.

பிரதமரை சந்திக்க வேண்டும்
உடனடியாக அனைத்து கட்சிகளையும் அழைக்க முடியவில்லை என்றால் பெரிய கட்சிகளையாவது உடனடியாக அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் கருத்துகளை பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும்.

தமிழக மக்கள் எதுவும் செய்யக் கூடாது
கர்நாடகாவில் வன்முறை நடப்பதால் தமிழ்நாட்டிலும் ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்காமல் தமிழ் மக்கள் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும். காவிரி நீர் பிரச்சனைக்கு தமிழக முதல்வரின் மெத்தன போக்கே காரணம் ஆகும். இந்த பிரச்சனை தொடர்பாக காவிரி கண்காணிப்பு குழுவிடம் ஏன் முறையிடவில்லை? என சுப்ரீம் கோர்ட் கேட்டுள்ளது. தமிழக விவசாயிகள் மீது ஜெயலலிதாவுக்கு அக்கறை இல்லை.

கர்நாடகாவுக்கு என்ன கஷ்டம்?
காவிரி அணையில் 56 டி.எம்.சி. தண்ணீர் இருக்கும் போது அதில் 15 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்து விட்டால் கர்நாடகாவுக்கு என்ன கஷ்டம்? என்று தெரியவில்லை. இதுவரை தமிழக முதல்வர்களாக இருந்தவர்களின் அணுகுமுறையால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய காவிரி தண்ணீர் கிடைத்து வந்தது. இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு முதல்வர் ஜெயலலிதாவின் அணுகுமுறையே காரணம். சிறுவாணி அணையில் கேரளா அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். .

முழு அடைப்புக்கு ஆதரவு
காவிரி பிரச்சனை தொடர்பாக விவசாய கூட்டமைப்பு சார்பில் நடக்கும் முழு அடைப்புக்கு எங்களது (காங்கிரஸ்) ஆதரவு உண்டு. காவிரியில் கர்நாடகா அரசு புதிய அணை கட்டுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும். தேவையானால் அணை கட்டுவதை எதிர்த்து காங்கிரஸ் போராடும் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications