எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலைக்கு ஓட்டு– நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு
நெல்லை: நெல்லை மாவட்டம் களக்காடு பகுதிகளில் உள்ள வாக்கு சாவடிகளில் காலை 7 மணிக்கே ஓட்டு போட வாக்காளர்கள் குவிந்தனர்.
இயந்திரத்தை பொருத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதால் அங்கு 15 நிமிடம் தாமதமாக ஓட்டு பதிவு தொடங்கியது.
இந்நிலையில் பத்மநேரி அரசு பள்ளி வாக்கு சாவடியில் மின்னனு இயந்திர கோளாறு ஏற்பட்டதால் காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கவில்லை. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து கோளாறை சரி செய்தனர்.
இதையடுத்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு வாக்கு பதிவு நடந்தது. இதே போல் களக்காடு அருகே இடையன்குளம் டிடிடிஏ துவக்கப்பள்ளி வாக்கு சாவடியில் ஆரம்பம் முதலே வாக்கு பதிவு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும் எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு பதிவாகிறது என திமுகவினர் புகார் தெரிவித்தனர். அங்குள்ள மொத்தம் 1063 ஓட்டுகளில் 476 ஓட்டுகள் பதிவான நிலையில் மதியம் 2 மணிக்கு ஓட்டு பதிவு நிறுத்தப்பட்டது. பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
களக்காடு இன்ஸ்பெக்டர் லட்சுமணன் தலைமையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இநத தகவலை கேட்டு அங்கு அதிமுகவினரும் குவிந்தனர். இதற்கிடையே நாங்குநேரி தாசில்தார் கல்யாண்குமார் தலைமையில் அதிகாரிகள் மாற்று இயந்திரம் கொண்டு வந்து பொருத்தினர். இதை தொடர்ந்து அங்கு 5.30 மணிக்கு மீண்டும் வாக்கு பதிவு தொடங்கியது.
ஆனால் அரை மணி நேரமே வாக்கு பதிவு நடந்ததால் பொது மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அங்கு மறு தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.