ஒரே ஆண்டில் 3 முதல்வர்களுடன் பணியாற்றிய ஆளுநரைக் கண்ட தமிழகம் - பிளாஷ்பேக் 2017
ஒரே ஆண்டில் 3 முதல்வர்களுடன் முன்னாள் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பணியாற்றியுள்ளார்.
சென்னை: மகாராஷ்டிரத்தின் ஆளுநராக உள்ள வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்தபோது 3 முதல்வர்களுடன் பணியாற்றியுள்ளார் என்பது இந்த ஆண்டின் சிறப்பாகும். இவரது பதவிக்காலத்தில் தமிழகத்தில் பல்வேறு அரசியல் திருப்புமுனைகளும் நடந்தேறின.
கடந்த 2016-ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றது. அப்போது ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது.
இதையடுத்து தமிழகத்துக்கு பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். இதன் பிறகு முதல்முறையாக தமிழகம் வந்த ஆளுநரை வரவேற்க ஜெயலலிதா சென்னை விமான நிலையத்துக்கு சென்றிருந்தார். அந்த மாதமே 22-ஆம் தேதி அவர் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி மறைவு
சுமார் 75 நாட்கள் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது அன்றிரவுஅவசர அவசரமாக மும்பையிலிருந்து வித்யாசாகர் வந்து ஜெ.வின் உடல்நிலை குறித்து கருத்து கேட்டறிந்தார். இதையடுத்து ஜெயலலிதா டிசம்பர் 5-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி மறைந்தார்.
ஜெயலலிதா மறைந்தவுடன்...
ஜெயலலிதா மறைந்த டிசம்பர் 5-ஆம் தேதி இரவோடு இரவாக அவரது நம்பிக்கைக்குரிய ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணத்தையும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் செய்து வைத்தார்.
பன்னீர் ராஜினாமா
இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளராகவ தேர்வு செய்யப்பட்ட சசிகலா முதல்வராகவும் ஆசைப்பட்டதால் சட்டசபைக் குழுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தரப்பு நிர்பந்தத்தின்பேரில் முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமா செய்தார். அதிமுக இரண்டாக உடைந்தது. இதையடுத்து 122 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வித்யாசாகர் ராவிடம் சசிகலா உரிமை கோரினார்.
ராஜினாமாவை திரும்ப பெற...
இதையடுத்து ஓ.பன்னீர் செல்வமும் தனது ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறவுள்ளதாகவும் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தனக்கு அனுமதியளிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார். இதனால் செய்வதறியாது திகைத்த ஆளுநர் மும்பைக்கு பறந்தார்.
சிறை சென்ற சசி
ஆளுநர் மும்பை சென்ற நேரத்தில் தனக்கு ஆதரவளித்த எம்எல்ஏக்களை தக்க வைத்து கொள்வதற்காக 122 பேரையும் கூவத்தூரில் தங்கவைத்தார். இதனிடையே சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து சட்டசபை குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்து விட்டு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி பெங்களூர் சிறை சென்றார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி
இதையடுத்து பெரும்பான்மையான எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் எடப்பாடி. இதையடுத்து கடந்த பிப். 16-ஆம் தேதி முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றுக் கொண்டார். ஆளுநர் உத்தரவின்படி பிப். 18-இல் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றி கண்டார்.
தமிழகத்துக்கு முழு நேர ஆளுநர்
தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வந்த நிலையில் தமிழகத்துக்கு நிரந்தர ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்ததன்பேரில் பன்வாரிலால் புரோஹித் நிரந்தர ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோஹித்திடம் பொறுப்புகளை ஒப்படைத்த வித்யாசாகர் ராவ் தனது பதவிக்காலத்தில் 3 முதல்வர்களுடன் பணியாற்றியுள்ளார் என்பது சிறப்பு. அதேபோல் சசிகலா முதல்வர் ஆவதை தடுத்த பெருமையும் வித்யாசாகர் ராவுக்கு உண்டு.