ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டுவதெல்லாம் அந்த காலம்.. சீறும் தோப்பு வெங்கடாசலம்
சென்னை: டிடிவி தினகரனை 420 என்று விமர்சனம் செய்ததை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தவிர்த்திருக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தெரிவித்தார்.
பெருந்துறையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த தோப்பு வெங்கடாசலம் தெரிிவித்ததாவது:
தினகரனுக்கு எதிரான தீர்மானம் எந்த விதியில் நிறைவேற்றப்பட்டது. தைரியம் இருந்தால் எடப்பாடி தரப்பு பொதுக்குழுவை கூட்டி தினகரனை நீக்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றிப் பார்க்கட்டும்.
தினகரனை 420 என விமர்சித்ததை முதல்வர் தவிர்த்திருக்க வேண்டும். முதல்வர் அப்படி சொன்ன பிறகுதான் டிடிவி தினகரனும் அதே வார்த்தைகளால் முதல்வரை விமர்சனம் செய்தார்.
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்ட வேண்டும் என்பதெல்லாம் அந்தக்காலம்.
எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் கைகாட்டியதும் அவர்களை பார்த்து லட்சக்கணக்கான மக்கள் வாக்களித்த புண்ணிய பூமி இது. இப்போது அதுபோன்ற மக்களை ஈர்க்கும் தலைவர் அதிமுகவில் இருக்கிறார்களா? டிடிவி தினகரன்தான் இளைஞர்களை ஈர்க்கும் தலைவர் என்பதால் அவரை முன்னிறுத்துகிறோம்.
அதிமுகவை தேடி கண்டுபிடிக்கும் நிலை இருக்கிறது. அதிமுகவை வழிநடத்த கூடிய தகுதி படைத்த ஒரே தலைவர் தினகரன். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி மறக்க மாட்டார் என நம்புகிறோம். அவரது மனசாட்சிக்கும், அவர் கும்பிடும் முருகனுக்கும் அவரை யார் முதல்வராக ஆக்கினார்கள் என்பது தெரியும்.
அமைச்சர் செங்கோட்டையன் மனதில் நன்றி இருக்கிறது. அதிமுக துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டது செல்லாது என நீதிமன்றம் கூறவில்லை. எனவே அவருக்கு யாரை கட்சியில் சேர்க்க வேண்டும், நீக்க வேண்டும் என்பது குறித்த அதிகாரம் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.