மனைவியை சம்பாதிக்க கட்டாயப்படுத்துவது இந்து மத தத்துவத்திற்கு எதிரானது: சென்னை ஹைகோர்ட்
சென்னை: கணவன் ஆதரவு இன்றி, மனைவி சம்பாத்தியத்தில் குடும்பத்தை நடத்த வேண்டும் என்பது இந்து மத தத்துவங்களுக்கு எதிரானது என்று சென்னை ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.
மதுரையை சேர்ந்த போஸ்ட் மேன், ஒருவர், தனது மனைவியை விவாகரத்து செய்திருந்த நிலையில், குடும்ப நல நீதிமன்றம், அவரது மனைவிக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
மனைவிக்கும், அவருடன் வாழும் 2 வயது பெண் குழந்தைக்குமாக இந்த தொகை நிர்ணயிக்கப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை ஹைகோர்ட்டில் போஸ்ட்மேன் கிரிமினல் ரிவிசன் மனு தாக்கல் செய்தார். நீதிபதி பி.தேவதாஸ் இதை விசாரித்தார்.
நீதிபதி தனது தீர்ப்பில் கூறியதாவது: மனுதாரர் தனது மனைவி ஒரு கடையில் வேலை செய்து வருவதாகவும், அந்த சம்பாத்தியமே அவரது குடும்பத்தை கவனித்துக் கொள்ள போதும் என்றும், எனவே, மாதம் ரூ.5 ஆயிரம் பணத்தை தான் தர தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மனுதாரர் மனைவி பணியாற்றுகிறார் என்பதற்கான உறுதியான ஆதாரத்தை கோர்ட்டில் சமர்ப்பிக்கவில்லை. அப்படியே சமர்ப்பித்தாலும்கூட, மனைவி வேலை பார்க்கிறார் என்பதற்காக கணவன், அவருக்கு தேவைப்படும் பணத்தை தரக்கூடாது என்று கூற முடியாது.
இந்து திருமண சட்டத்தின்படி, மனைவியை பராமரிக்க வேண்டிய முழு பொறுப்பும் கணவனை மட்டுமே சேரும். இந்து குடும்பத்தை சேர்ந்த ஒரு கணவன், தனது மனைவி கட்டாயம் வேலைக்கு செல்ல வேண்டும் என்றோ, அவரை அவரே பார்த்துக்கொள்ள சம்பாதித்துக்கொள்ள வேண்டும் என்றோ வற்புறுத்த முடியாது. அவ்வாறு கூறுவது இந்து தத்துவங்களுக்கு எதிரானது.
நீங்கள் மத்திய அரசு ஊழியர். மாதம் ரூ.23 ஆயிரம் சம்பாதிக்கிறீர்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடந்தோறும் சம்பள உயர்வு மட்டுமின்றி, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, டி.ஏ படியும் மாற்றியமைத்து தரப்படுகிறது. எனவே மனைவியை பராமரிக்க பண வசதியில்லை என கூற முடியாது.
மதுரையில் ரூ.5 ஆயிரத்தை வைத்துக்கொண்டு ஒரு பெண்மணி, தனது குழந்தையையும் பராமரிப்பது என்பது மிகவும் கடினம். வயிற்றுக்கும், வாய்க்கும்தான் அந்த பணம் போதும். இவ்வாறு நீதிபதி கூறி, போஸ்ட்மேன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.