என்ன பேஸ்புக்ல எல்லாரும் ரிஸைன் பண்ணிட்டாங்களா? ஹையய்யோ!
சென்னை: உலகின் பலபகுதிகளில் பேஸ்புக் எனப்படும் சமூக வலைதள செயல்பாடு ஸ்தம்பித்து போய் விட்டது.
அரை மணி நேர அளவுக்கு பேஸ்புக் இல்லாமல் போனதால், பேஸ்புக் பயனாளர்கள் அனைவரும் அதிர்ச்சியில் மூழ்கி டென்ஷனாகி விட்டனர்.
பேஸ்புக் எனப்படும் இந்த சமூக வலைதளமானது இன்றய காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கும்"இரண்டாவது மூளை" என்று சொல்லும் அளவிற்கு முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது.
முன்னேற்றம் தரும் பேஸ்புக்:
நண்பர்களுடன் சாட் செய்ய உதவும் சமூக வலைதளம் என்பதையும் தாண்டி, ஷேரிங், லைக் மற்றும் பிராட்காஸ்டிங் எனப்படும் பேஸ்புக்கை மையமாக வைத்து வளர்ந்துவரும் தொழில்களும் முன்னேற்றமடைந்து வருகின்றன.
நாங்களாம் பேஸ்புக் குடும்பம்:
காலையில் எழுந்து சுப்ரபாதம் கேட்கும் குடும்பங்களை விட, பேஸ்புக்கை விரிக்கும் குடும்பங்கள்தான் இப்போது பரவலாகக் காணப்படுகின்றது. எல்லாவற்றையும் எடுத்துரைக்கும் பேஸ்புக் ஒரு நிமிடம் இல்லாவிட்டாலும் மக்கள் வேலையே செய்ய இயலாமல் போய்விடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஹையயோ! போச்சே:
இந்நிலையில்தான் இன்று மதியம் பேஸ்புக் வலைதளத்தை விரித்தவர்களுக்கெல்லாம் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அதுதான் "தடங்கலுக்கு வருந்துகிறோம் - ஏதோ ஒன்று தவறாக உள்ளது -விரைவில் சரி செய்யப்படும்" என்ற செய்தி.
பேஸ்புக்குக்கே ஆப்பு:
கிட்டதட்ட 10 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த இந்த பாதிப்பு உடனடியாக சரி செய்யப்பட்டுள்ளது. இதற்கு நடுவில் வாட்ஸ் அப் போன்றவற்றில் நண்பர்களுக்கிடையே பேஸ்புக் அவ்ளோதான்,பேஸ்புக்கில் எல்லாரும் ரிஸைன் பண்ணிட்டாங்க, மரண பயத்தை காட்டிடாய்ங்கடா என்றெல்லாம் செய்தி பரவியது தனி காமெடிகதை.
சொர்க்கமா? படுகுழியா?:
ஆனால், இந்த சிறு விசயம் ஒரு பெரிய கருத்தை நமக்கு உணர்த்தத்தான் செய்கின்றது. ஒருகாலத்தில் சமூக வலைதளங்களை நாம் பயன்படுத்தினோம். ஆனால், இன்றோ அவைதான் நம்மை பயன்படுத்துகின்றன. இதிலிருந்து இனி மீளவே முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
பத்து நிமிஷத்துல பைத்தியக்காரங்களாக்கிட்டாங்களே நம்மளை..