போலீஸ் பக்ருதீன் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு விட வேண்டும் - அண்ணன் கோரிக்கை
மதுரை: என் தம்பி போலீஸ் பக்ருதீன் அப்பாவி. அவன் மீது போலீஸார் பொய்யான வழக்கைப் போட்டுள்ளனர். அவன் மீதான வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று பக்ருதீனின் அண்ணன் தர்வீஸ் மைதீ்ன் கூறியுள்ளார்.
இதுகுறித்து தாவீஸ் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், என் தம்பி அப்பாவி. அவனுக்கு அத்வானி குண்டுவைப்பு சம்பவத்தில் எந்தத் தொடர்பும் இல்லை. அவனை பொய்யாக இந்த வழக்கில் போலீஸார் சேர்த்துள்ளனர்.
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு தெளஹீத் ஜமாத் போன்ற அமைப்புகள் இந்த நெருக்கடியான நேரத்தில் எனது தம்பியைக் கைவிட்டு விட்டது வருத்தம் தருகிறது.
டிவியில் செய்தி பார்த்துத்தான் எனது தம்பி கைதானதை தெரிந்து கொண்டோம். பின்னர் வழக்கறிஞர் தடா அப்துர் ரஹீம் மூலம் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு கைது உண்மையா என்று கேட்டு அதை இறுதி செய்தோம்.
தீவிரவாத நடவடிக்கைகளில் பக்ருதீனுக்குத் தொடர்பு இருப்பதாக போலீஸார் கூறுகிறார்கள். ஹவாலாவில் தொடர்பு இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் வாடகை கூட கொடுக்க முடியாத அளவுக்கு பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில்தான் நாங்கள் இருக்கிறோம். இதுதான் உண்மை.
எந்த குற்றச் செயலிலும் எனது தம்பிக்குத் தொடர்பு இல்லை. இந்துத் தலைவர்களைக் கொல்வதிலோ அல்லது வன்முறையில் ஈடுபடுவதிலோ எங்களுக்கு ஒருபோதும் நம்பிக்கை இருந்ததில்லை. அப்பாவி மக்களின் உயிரைப் பறிப்பதில் துளியும் நம்பி்க்கை இல்லாதவர்கள் நாங்கள்.
போலீஸார் சட்டப்படி, சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பக்ருதீன் சம்பவம் எங்களது குடும்பங்களை நிலை குலைய வைத்துள்ளது. அனைவரும் அதிர்ந்து போய் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறோம்.
பக்ருதீன் குறித்து அறிவதற்காக என்னிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது என்னை உடல் ரீதியாகவும் துன்புறுத்தினார்கள். பின்னர் சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக ஆயிரம் ரூபாய் பணமும் கொடுத்தார்கள்.
இப்போது பக்ருதீன் பிடிபட்டு விட்டதால் எங்களை நிம்மதியாக வாழ விட வேண்டும். இனியும் எங்களது வீட்டுக்கு போலீஸார் வருவதை நாங்கள் விரும்பவில்லை.
எனது தம்பி மீது போடப்பட்ட பல்வேறு வழக்குகளிலும் எனது பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது. இதனால் எனக்கு யாரும் வேலை தர மறுக்கின்றனர். வேலை இல்லாததால் நான் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.
விசாரணை என்ற பெயரில் என்னையும், என் தாயாரையும் போலீசார் அலைக்கழிக்கின்றனர். எனது தம்பியின் மீது போடப்பட்ட வழக்குகள் குறித்து சிறப்பு புலனாய்பு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்றார் அவர்.
தர்வீஸின் மனைவி நஸீமா கூறுகையில், விசாரணை என்ற பெயரில் என்னையும் துன்புறுத்தினர் போலீஸார். பெண் போலீஸாரை வைத்து விசாரிக்காமல் ஆண் போலீஸார்தான் என்னை விசாரித்தனர். எனது கணவரை அடித்தனர். ஒரு பெண் போலீஸ் அதிகாரி, எனது கணவருக்கு ஏற்பட்ட காயம் விபத்தில் ஏற்பட்டதாக டாக்டர்களிடம் கூறுமாறு என்னை மிரட்டினார். ஆனால் அடித்ததால்தான் காயம் ஏற்பட்டதாக டாக்டர்கள் கண்டுபிடித்து விட்டனர் என்றார்.
வேலூர் கோர்ட்டில் பக்ருதீன் ஆஜர்
இதற்கிடையே, சென்னையில் கைது செய்யப்பட்டபோலீஸ் பக்ருதீனுக்கு, வேலூரில் நடந்த இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பன் கொலையிலும் தொடர்பு இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார், போலீஸ் பக்ருதீனை வேலூருக்கு அழைத்துச் சென்று சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 3-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில், மாஜிஸ்திரேட் சிவகுமார் முன்னிலையில் நேற்று இரவு 9.40 மணிக்கு ஆஜர்படுத்தினார்கள்.
2011ம் ஆண்டுதான் கடைசியாக பக்ருதீனைப் பார்த்தேன் - தாயார்
பக்ருதீனின் 70 வயது தாயார் சையத் மீரா தனது மகன் குறித்துக் கூறுகையில், எனது கணவருக்கு நான் 2-வது மனைவி. எனக்கு தர்வீஸ் மைதீன், போலீஸ் பக்ருதீன் ஆகிய 2 மகன்கள் இருந்தனர். எனது 2-வது மகன் போலீஸ் பக்ருதீனுக்கு கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்து வைத்தோம். இந்தநிலையில் அவன் மீது போடப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தநிலையில் திருமணமான 9 மாதத்தில் அவன் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். கடந்த 2011 அக்டோபர் மாதம் சேலத்தில் வழக்கு தொடர்பாக ஆஜராவதற்காக சென்ற எனது மகன் போலீஸ் பக்ருதீன் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவன் தற்போது வரை உயிருடன் இல்லை என்றே நினைத்தேன் என்றார்.












Click it and Unblock the Notifications