நெற்பயிர் கருகி நாசம்.. அதிர்ச்சியில் தூக்கிட்டு விவசாயி தற்கொலை.. டெல்டாவில் அதிகரிக்கும் மரணம்
நெற்பயிர் கருகிய அதிர்ச்சியில் நாகை மாவட்ட விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை: டெல்டா மாவட்டமான நாகையில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. இன்று காலையில் விவசாயி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ளது செண்பகராயநல்லூர். இந்தப் பகுதியில் வசித்தவர் உலகநாதன். இவர் 2 ஏக்கர் பரப்பளவில் நெற் பயிர் விளைவித்திருந்தார். போதிய அளவு தண்ணீர் இல்லாமல் பயிர் கருகியது.
மேலும், அவருக்கு விவசாயக் கடனும் அதிகமாக இருந்துள்ளது. சாகுபடி செய்து கடனை கட்டிவிடலாம் என்ற நம்பிக்கையும் பொய்த்துப் போனதால் விவசாயி உலகநாதன் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டார். மன நெருக்கடி அதிகமானதால், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதே போன்று திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 2 ஏக்கர் கரும்பு பயிர் கருகிய வேதனையில் ஏற்பட்ட மாரடைப்பில் விவசாயி சுப்பிரமணியன் மரணம் அடைந்தார். விவசாயி சுப்பிரமணியன் வழக்கம் போல இன்றும் வயலுக்கு சென்ற போது அதே இடத்திலேயே சுருண்டு விழுந்து மரணம் அடைந்தார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடரும் விவசாயிகள் மரணத்தை தடுப்பதற்காக வழிவகைகள் குறித்து தமிழக அரசு இதுவரை அறிவிக்கவில்லை. இறந்த விவசாயிகளின் குடும்பத்திற்கான நிவாரணம் குறித்து அதிமுக தலைமையிலான அரசு வாய்த்திறக்காமல் உள்ளது வேதனை அளிக்கிறது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.