தொடரும் சோகம்..பயிர் கருகியதால் தஞ்சை, உசிலம்பட்டியில் இரண்டு விவசாயிகள் மரணம்
பயிர் கருகியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மேலும் இரண்டு விவசாயிகள் மரணம் அடைந்தனர்.
தஞ்சாவூர்: டெல்டா பகுதியான தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பயிர் கருகியதைப் பார்த்த விவசாயி கணேசன் என்பவர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தாம் பயிரிட்டிருந்த சோளப்பயிர் கருகியதால் மனமுடைந்த விவசாயி பாண்டி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே சின்னபொன்னாப்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி கணேசன். இவர், 4 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் பயிரிட்டுள்ளார். வழக்கம் போல வயலுக்கு சென்றிருந்த போது, பயிர்கள் கருகி போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் சுருண்டு விழுந்து மரணமடைந்துள்ளார்.

தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதைக் கண்டு மனம் உடைந்த நிலையில் விவசாயி ஜெயக்குமார் இருந்ததாகவும், அதனால் ஏற்பட்ட மாரடைப்பால் அவர் இறந்துவிட்டதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சில்லாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாண்டி என்வவர் 1 ஏக்கரில் பயிரிட்டிருந்த குதிரைவாலி, சோளம் கருகியதால் மனமுடைந்து இன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பருவமழை பொய்த்து போனதால், தமிழகத்தில் விவசாயப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை இல்லாததால் பயிர்கள் கருகுவதைப் பார்த்து அதிர்ச்சி அடையும் விவசாயிகள் தங்களது உயிர்களை மாய்த்துக்கொள்வது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications