நெல்லுக்கு போதிய விலை இல்லை - நெல்லை, தூத்துக்குடி விவசாயிகள் கவலை
நெல்லை: நெல்லுக்கு போதிய விலை கிடைக்கவில்லை என தூத்துக்குடி, நெல்லை மாவட்ட விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தாமிரபரணி ஆற்று பாசனத்தின் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 86 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் பெய்யும் தென்மேற்கு பருவமழையை நம்பி கார் பருவ நெல்சாகுபடி நடக்கிறது. அக்டோபர் துவங்கி நான்கு மாதங்களில் வடகிழக்கு பருவமழைக்காலத்தில் பிசான நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை நன்றாக பெய்ததின் காரணமாக விவசாயிகள் குறுகிய கால ரக நெல் பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர். வறட்சியான பகுதிகளில்கூட இந்தாண்டு நல்ல விளைச்சல் கிடைத்துள்ள நிலையில், அனைத்து பகுதிகளிலும் நெல் பயிர் செழிப்பாக வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.
ஆனால் நெல்லு்க்கு போதிய விலை இல்லை என்று கூறப்படுகிறது. அனைத்து நெல் ரகங்களுக்கும் விலைகளை வியாபாரிகள்தான் நிர்ணயம் செய்கின்றனர். இதனால் எதிர்பார்த்த விலை கிடைப்பதில்லை. நெல் மூட்டைகளை வி்ற்க முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.
குறிப்பாக மானூர், சங்கரன்கோவில் வட்டாரங்களில் தற்போது நெல் அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது. 74 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை அம்பை 16 ரக நெல் ஆயிரத்திற்கு மேல் விற்பனை ஆகியது. ஆனால் தற்போது ரூ.850 க்கு மட்டுமே வி்ற்பனையாகிறது.
இதுகுறித்து மானூர் பகுதியை சேர்நத விவசாயி அண்ணாமலை கூறுகையில், நெல் அறுவடை முடிந்து நெல்மணிகளை களத்தில் குவித்து வைத்துள்ளோம். ஆனாலே நெல்லுக்கு போதிய விலை இல்லை என வருத்தம் தெரிவித்தார்.
வேளாண்மை துறை மூலம் தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தை அமைத்திருந்தால், எங்களுக்கு போதிய விலை கிடைத்திருக்கும் என்றார். தற்காலிக நெல் கொள் முதல் நிலையம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.