சொத்துத் தகராறால் விபரீதம் – செங்கல்லால் மகன் மண்டையை உடைத்த தந்தை
கரூர்: கரூர் அருகே சொத்துத் தகராறில் பெற்ற தந்தையே மகனைக் கல்லால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம் புகளூர் அருகேயுள்ள கோவில் நாணப்பரப்புவை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி. இவரது தந்தை நல்லுச்சாமி வாங்கல் அருகே உள்ள காளிபாளையத்தில் இரண்டாவது மனைவியுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் ராஜீவ்காந்தி தன் தந்தையிடம் தனக்கு சேர வேண்டிய சொத்துகளை பிரித்து தருமாறு பலமுறை கேட்டுள்ளார். ஆனால் நல்லுச்சாமி சொத்துகளை பிரித்து தர சம்மதிக்கவில்லை.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ராஜீவ்காந்தி காளிபாளையத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்று எனக்கு சேர வேண்டிய சொத்துகளை பிரித்து தருமாறு கேட்டுள்ளார். நல்லுச்சாமி சொத்துகளை பிரித்து தர மறுக்கவே ராஜீவ்காந்தி புகளூரில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டார்.
இந்நிலையில் ராஜீவ்காந்தியின் தந்தை நல்லுச்சாமி தனது மகன் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். அப்போது அருகிலிருந்த செங்கல்லை எடுத்து ராஜீவ்காந்தி மீது வீசியுள்ளார்.
இதில் ராஜீவ் காந்தியின் மண்டை உடைந்தது. உடனடியாக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து ராஜீவ் காந்தியின் மீது செங்கல்லை எடுத்து வீசி மண்டையை உடைத்த தந்தை நல்லுச்சாமி மீது வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.