ஏற்காடு: ஓட்டுப் போட்டு விட்டுத் திரும்பிய மாணவர், தந்தையுடன் விபத்தில் சிக்கி பலி
சேலம்: ஏற்காடு சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலில் வாக்களிக்க தனது தந்தையுடன் சென்ற மாணவர், விபத்தில் சிக்கினார். இதில் இருவரும் பரிதாபமாக பலியானார்கள்.
சேலம் மாவட்டம், ஏற்காடு தொகுதிக்குட்பட்ட மாசிநாக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். 48 வயதான இவரும், இவரது 22 வயது மகனான கல்லூரி மாணவர் செல்வராஜும், ஓட்டுப் போடுவதற்காக பைக்கில், மாசிநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குசாவடிக்கு சென்றனர்.
பின்னர் ஓட்டுப் போட்டு விட்டு இருவரும் திரும்பிக் கொண்டிருந்தனர். பைக்கை ராஜேந்திரன் ஓட்டிச் சென்றார். பின்னால் மகன் அமர்ந்திருந்தார். அப்போது வேகமாக வந்த ஒரு டேங்கர் லாரியை ஓவர்டேக் செய்ய முயன்றார் ராஜேந்திரன். அப்போது எதிர் திசையில், சேலத்திலிருந்து அரூர் நோக்கி போய்க் கொண்டிருந்த கார், ராஜேந்திரனின் பைக் மீது மோதி விட்டது.
இதில் ராஜேந்திரனும், அவரது மகனும் தூக்கி வீசப்பட்டனர். மேலும் இருவரும் டேங்கர் லாரிக்குக் கீழே போய் சிக்கிக் கொண்டனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications