நேதாஜி ஆவணங்களை வெளியிடுக! டிச.23ல் வைகோ போராட்டம்! மமதா வாழ்த்து- மே.வங்க அமைச்சர் பங்கேற்பு!
சென்னை: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான ஆவணங்களை மத்திய அரசு வெளியிட வலியுறுத்தி வரும் 23-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். மேலும் தமது கட்சியின் ஆர்ப்பாட்டத்துக்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி வாழ்த்து தெரிவித்ததாகவும் ஆர்ப்பாட்டத்தில் மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி பங்கேற்க உள்ளதாகவும் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய நாட்டின் வரலாற்றில் அழியாப் புகழ்பெற்ற வங்கத்துச் சிங்கம் நேதாஜி, இந்திய விடுதலைப் போரில் ஈடு இணையற்ற தியாகம் செய்தவர். பர்மாவின் மாண்டலே சிறையிலும், இந்தியாவின் பல்வேறு சிறைகளிலும் எண்ணற்ற இன்னல்களை எதிர்கொண்டவர்.
இந்தியாவில் இருந்து ரகசியமாக வெளியேறி ஜெர்மனியில் இருந்தவாறு இந்திய விடுதலைப் போரை இயக்கியவர். கடலுக்கு அடியில் நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்து ஜப்பானுக்கு சென்று இந்திய தேசிய இராணுவத்தின் தலைவரானார்.
‘டெல்லி சலோ' என்ற முழக்கத்துடன் அவரது ஐ.என்.ஏ படை இம்பால் வரை முன்னேறியது. ஜப்பானியர்கள் பின்வாங்கியதாலும், அமெரிக்க பிரித்தானிய இராணுவ விமானங்களின் குண்டு வீச்சாலும் ஐ.என்.ஏ படைக்கு போரில் பின்னடைவு ஏற்பட்டது.
1945 ஆகஸ்ட் 18 இல் நேதாஜி பயணித்த விமானம் நொறுங்கி விழுந்ததாகவும், இதில் அவர் இறந்து போனதாகவும், நான்கு நாட்கள் கழித்து ஜப்பானிய அரசு அறிவித்த போதிலும், அவர் அதன் பிறகும் உயிரோடு இருந்தார் என்றும் பல்வேறு ஆணித்தரமான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.
நேதாஜி குறித்தும், அவிழ்க்கப்படாத பல மர்ம முடிச்சுகள் குறித்தும், ஆதாரப்பூர்வமான பல்வேறு ஆதாரங்களையும், ஆவணங்களையும், கோப்புகளையும் சுதந்திரத்திற்கு பின் இந்திய அரசு அழித்துவிட்டதற்கான சாட்சியங்கள் வெளியாகியுள்ளன.
மத்தியில் ஆட்சிக்கு வருகிற வரையிலும் நேதாஜி பற்றிய அனைத்து ஆவணங்களையும் மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று வற்புறுத்தி வந்த பாரதிய ஜனதா கட்சி, மத்தியில் ஆட்சிக்கு வந்த பின் நேதாஜி குறித்த உண்மைகளை வெளியிட்டால் சில வெளிநாடுகளோடு உள்ள இந்திய உறவு பாதிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அலுவலகம் தெரிவித்து இருப்பது மிகவும் கண்டனத்திற்கு உரியதாகும்.
நேதாஜியை தங்களின் இதய தெய்வமாக தமிழர்கள் போற்றி வந்துள்ளனர். குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்து சென்று மலேசியா, சிங்கபூரில் வாழ்ந்த தமிழர்கள் நேதாஜியின் ஐ.என்.ஏ படையில் சேர்ந்து வீரப்போர் புரிந்தனர். நாற்பதாயிரம் தமிழர்கள் தங்கள் உயிரைத் தந்தனர்.
நேதாஜி குறித்த உண்மைகளை வெளியிட மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், அத்தலைவரைப் பற்றிய அனைத்து ஆவணங்களையும் மத்திய அரசு வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் டிசம்பர் 23-ந் தேதி அன்று காலை 10 மணியளவில் தலைநகர் சென்னையில் வள்ளுவர் கோட்டத்திற்கு எதிரில் எனது தலைமையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் அறப்போர் ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது.
இதனை அறிந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி, எனது முயற்சியை பராட்டியதோடு, தனது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும், மேற்கு வங்க அரசின் உயர்கல்வி, பள்ளிக்கல்வி, நாடாளுமன்ற நடவடிக்கைகள் துறையின் அமைச்சருமான முனைவர் பார்த்தா சட்டர்ஜி, 23-ந் தேதி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார் என்றும் எனக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஒஷசா மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமைகள் போராளி பெபி பிரசாத் புருஸ்டி இந்த அறப்போரில் பங்கேற்க உள்ளார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற தொண்டர்களும், வீரத்தலைவர் நேதாஜியின் பற்றாளர்களும் பெருந்திரளாக 23-ந் தேதி அறப்போரில் பங்கேற்க அன்புடன் அழைக்கின்றேன்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.