சென்னை சில்க்ஸில் தீ ஒரு வழியாக கட்டுப்படுத்தியாச்சு... அமைச்சர் ஜெயகுமார்
சென்னை சில்க்ஸில் 32 மணி நேரத்துக்கும் மேலாக கொழுந்து விட்டு எரிந்து வந்த தீயானது ஒரு வழியாக கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
சென்னை: சென்னை சில்க்ஸில் 32 மணி நேரத்துக்கு பின்னர் தீயும், கரும்புகையும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
திநகரில் உள்ள சென்னை சில்க்ஸில் நேற்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. சுமார் 400-க்கும் மேற்பட்ட வீரர்களை கொண்டு தீயை அணைக்க 2 நாள்களாக போராடி வந்தனர். இந்நிலையில் ஒரு வழியாக 32 மணி நேரத்துக்கு பின்னர் இன்று தீயானது கட்டுக்குள் இருப்பதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
கட்டடத்தை ஆய்வு செய்ய வந்த அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், பெரும் போராட்டத்துக்கு பின்னர் தீயும், கரும்புகையும் கட்டுக்குள் வந்துவிட்டது.
தீயை அணைக்க சுமார் 200 லாரி நீர் பயன்படுத்தப்பட்டது. இந்த கட்டடம் மட்டுமல்லாது சென்னையில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.
அவ்வாறு இருப்பின் அதன் உரிமையாளர்கள் மீதும், அனுமதி அளித்த அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும். கட்டடத்தை வெடி வைத்து நொடியில் தகர்த்து விடமுடியும். ஆனால் சுற்றியுள்ள கட்டடங்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. கட்டடத்தின் பகுதிகள் சிறிது சிறதாக விழுந்ததால் 25 அடிக்கு இடிபாடுகள் உள்ளன. அவை முற்றிலுமாக அகற்றப்படும் என்றார் அவர்.