கொழும்பில் நடைபெற இருந்த மீனவர் பேச்சுவார்த்தை.. புறக்கணித்தது தமிழகம்!
சென்னை: தமிழக, இலங்கை மீனவர் பிரதிநிதிகள் இடையே கொழும்பில் இன்று நடைபெற இருந்த பேச்சுவார்த்தையை தமிழகம் புறக்கணித்துள்ளது,
பாக் ஜலசந்தி உள்ளிட்ட சில மீன்பிடி பகுதிகளில் தமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் இடையே மீன்பிடிப்பு தொழிலில் பிரச்சினைகள் தொடர்கின்றன. அங்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள், அடிக்கடி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் சந்தித்து பேசுவதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதாவிடம் மீனவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.
இரு நாடுகளை சேர்ந்த மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை சென்னையில் வைத்துக் கொள்ளலாம் என்றும் இலங்கை மீனவர்கள் சார்பில் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்பவர்களின் பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் பிரதமருக்கு கடந்த ஆண்டு முதல்வர் ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து இரு நாட்டு மீனவர்கள் கூட்டத்தை ஜனவரி 27-ந்தேதி சென்னையில் வைத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பு, இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.
இதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டது. அதே நேரத்தில் தமிழக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
தமிழக சிறையிலுள்ள 179 இலங்கை மீனவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டனர். இலங்கையில் இருந்து 250-க்கும் மேற்பட்ட தமிழக மற்றும் காரைக்கால் மீனவர்கள் படிப்படியாக அங்கிருந்து விடுவிக்கப்பட்டனர். இவர்களை இந்திய கடலோர காவற்படை அழைத்து வந்தது.
இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 27-ந்தேதி சென்னையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் பின்னரும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது.
177 பேரை விடுவிக்க கோரிக்கை
இதனால் மேலும், முதற்கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 177 தமிழக மீனவர்களையும், அவர்களின் 44 படகுகளையும் விடுவிப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 8-ந் தேதி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கோரியிருந்தார்.
கொழும்பில் நடைபெற இருக்கும் பேச்சு வார்த்தைக்கு முன்பு இதை அவர் நிபந்தனையாக வைத்துள்ளார். ஆனால் தமிழக அரசின் நிபந்தனைப்படி 177 தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்படவில்லை.
இதைத் தொடர்ந்து இன்று கொழும்பில் நடைபெற இருந்த இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையை தமிழக அரசு புறக்கணித்துள்ளது.