தடை செய்யப்பட்ட உயிரினங்களை பிடித்த மீனவர்கள் கைது
தூத்துக்குடியிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் உள்ளது பாதுகாக்கப்பட்ட கடல் வாழ் உயிரின பகுதியான மன்னார் வளைகுடா.
இங்கு அரிய வகை உயிரினங்களும், தாவரங்களும் வாழ்வதால் இங்கு மீன் பிடிக்க யாருக்கும் அனுமதி கிடையாது. தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது குருசடை பகுதியில் சிலர் நாட்டு படகில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். இதில் வேதாளை பகுதியை சேர்ந்த காசி என்பவரின் நாட்டு படகை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அந்த படகில் தடை செய்ய 54 குதிரை முள்ளி சங்கு என்ற அரிய வகை கடல்வாழ் உயிரினம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அந்த படகில் இருந்த காசி, முனியசாமி, சதிஷ்வரன், பாலசுப்பிரமணியன் ஆகிய 4 மீனவர்களை கைது செய்து சங்குகளை கைப்பற்றி, படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மண்டபம் கடலோர காவல் படை அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் கமாண்டர் மோரோ விசாரணை நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், மன்னார் வளைகுடா பகுதியில் அரிய வகை சங்குகளும், மீன்களும் தாவரங்களும் உள்ளன. இதனால் அங்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதிக அளவில் மீன்பிடித்தால் மீன் வளம் குறையும், மீனவர்களும் பாதிக்கப்படுவார்கள். இதனால் தடை செய்யப்பட்ட சங்கு, கடல் குதிரை போன்றவற்றை பிடிப்பதை மீனவர்கள் தவிர்க்க வேண்டும்.
தவறுதலாக அவை வலையில் சிக்கினால் உடனடியாக அதை விடுவித்து கடலில் விட வேண்டும் என்று தெரிவித்தார்.