தங்கச்சிமடம் மீனவர்கள் போராட்டம் - ஒருபிரிவினர் வாபஸ்... மற்றொரு பிரிவு தொடர்கிறது
ராமேஸ்வரம் : தங்கச்சிமடத்தில் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும் பிரிட்ஜோ உடலை பெற்று நல்லடக்கம் செய்ய ஒரு பிரிவு மீனவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் தங்கச்சிமடத்தில் போராட்டம் முடிவு பெறவில்லை என மீனவர்கள் சங்கத் தலைவர் எமரால்டு தெரிவித்துள்ளார். நாளை அறிவித்தப்படி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.
தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்ஜோ என்ற 22 வயதான மீனவர் சிங்கள கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து அப்பகுதி மீனவர்கள் 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை தமிழக அரசியல் தலைவர்களும் மத்திய அமைச்சர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மத்திய அமைச்சர்கள் பேச்சு வார்த்தையை அடுத்து மீனவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக மீனவர் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் அருளானந்தம் அறிவித்துள்ளார்.
பிரிட்ஜோவின் உடலை பெற்று நல்லடக்கம் செய்யவும் போராட்டக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. அவரது உடல் நாளை நல்லடக்கம் செய்ய உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மீனவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக வெளியான தகவலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் மறுத்துள்ளனர். இதுதொடர்பாக பேசிய மீனவர்கள் சங்கத் தலைவர் எமரால்டு போராட்டம் இன்னும் முடிவு பெறவில்லை தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது என்றார்.
பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை அறவழியில் அமைதியாகப் போராட்டம் நடைபெறுவதாக அவர் கூறினார். போராட்டத்தை திசைத்திருப்ப முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறிய அவர் திங்கட்கிழமையன்று அறிவித்தப்படி உண்ணாவிரதம் நடைபெறும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.