தூத்துக்குடி சம்பவம்.. கறுப்பு கொடியுடன் குமரி கடலில் இறங்கி மீனவர்கள் முழக்கம்!
கன்னியாகுமரி அருகே மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
Recommended Video
கன்னியாகுமரி : தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி அருகே குரும்பனை பகுதியில் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடியின் மக்கள் எழுச்சியின்போது நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டிற்கு 13 பேர் உயிரிழந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து ஏராளமான அரசியல் கட்சி, அமைப்புகள், இயக்கங்கள், சங்கங்கள் சார்பாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு வடிவமாக, கன்னியாகுமரி மீனவர்களும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், துப்பாக்கிச்சூடு நடத்திய காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்னாசி தேவாலயப் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து, கருப்புக் கொடிகளுடன் கடலில் இறங்கினர்.
அப்போது, மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக மீனவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். காவல்துறையினரின் தடையை மீறி பெண்கள் குழந்தைகள் உட்பட மீனவர்கள் கடலில் இறங்கியுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.