கோபி அருகே 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கோபி: கோபிச்செட்டிபாளையம் அருகே பத்து கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக, ஈரோடு மாவட்டம், கோபியில் உள்ள குண்டோரிப்பள்ளம் அணை நிரம்பியுள்ளது. இதனால், அந்த அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், அங்குள்ள குன்றி, விளங்கோம்பை, பெம்மனுர் உள்ளிட்ட வனப்பகுதியிலும் கனமழை காரணமாக அணைகள் நிரம்பியுள்ளது.
குண்டேரிப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து அணையில் இருந்து 4 ஆயிரம் கன அடிக்கு மேல் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் குண்டேரிப்பள்ளம் ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து கொங்கர்பாளைம், வினோபா நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வருவாய்த் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.