அடையாற்றில் வெள்ளம்: மூழ்கிய சைதை, காசி தியேட்டர், கோட்டூர்புரம், அடையாறு பாலங்கள்
சென்னை: அடையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சென்னை நகரில் அதன் குறுக்கே உள்ள பிரதான பாலங்களான காசி தியேட்டர் பாலம், சைதாப்பேட்டை பாலம், கோட்டூர்புரம் பாலம், அடையாறு திரு.வி.க. பாலம் ஆகியவை நீரில் மூழ்கியுள்ளன.
தொடர்ந்து பெய்த கனமழையால் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளதால் மக்கள் மொட்டை மாடியில் வசிக்க வேண்டி உள்ளது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று காலை 5 ஆயிரம் கன அடி நீரும், பின்னர் 7 ஆயிரம் கன நீரும் திறக்கப்பட்டது. பகல் நேரத்தில் 20 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. தற்போது ஏரியில் இருந்து 30 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் அடையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அடையாற்றின் குறுக்கே உள்ள பாலங்களில் வெள்ள நீர் ஓடுவதால் அங்கு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அடையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் சென்னை நகரில் அதன் குறுக்கே உள்ள தரை பாலங்கள் அனைத்தும் மூழ்கிவிட்டன.
மேம்பாலங்களின் கைபிடி சுவர் வரை ஒட்டி வெள்ள நீர் ஓடிக் கொண்டிருந்தது. இந்நிலையில் தற்போது அடையாற்று பாலங்களின் மீது பல அடி உயரத்திற்கு வெள்ள நீர் ஓடுகிறது.
அடையாற்றின் குறுக்கே உள்ள சென்னை சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலம், ஈக்காட்டு தாங்கல் மேம்பாலம் (காசி தியேட்டர் பாலம்), கோட்டூர்புரம் மேம்பாலம், அடையாறு திரு.வி.க. பாலம் ஆகியவை நீரில் மூழ்கியுள்ளன. முன்னதாக அந்த மேம்பாலங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.
வெள்ளப்பெருக்கால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலை, ஜி.எஸ்.டி. சாலை, பழைய மகாபலிபுரம் சாலைகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
#ChennaiFloods #ChennaiRainsHelp - Avoid Saidapet Bridge. #Chennairains pic.twitter.com/oB5XHJC8YC
— A1_Indian (@RahejaVinod) December 2, 2015