Exclusive: சென்னைக்கு வெள்ள அபாயம்.. பெருங்குடி, வேளச்சேரி, கிண்டி எஸ்டேட், ஏர்போர்ட் நிலைமை மோசம்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சென்னைக்கு வெள்ள அபாயம்.. நித்யானந்த் ஜெயராம் சிறப்பு பேட்டி-வீடியோ

    - ராஜாளி

    சென்னை: சென்னைக்கு வெள்ள பேராபயம் இருப்பதாகவும், பெருங்குடி, வேளச்சேரி, கிண்டி தொழிற்பேட்டை, விமான நிலையப் பகுதிகளுக்கு அதிக அளவில் வெள்ள அபாயம் இருப்தாகவும் சுற்று சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராம் சிறப்பு பேட்டி ஒன்றில் நம்மிடம் தெரிவித்தார்.

    கேரளாவில் வான வெடிப்பு ஏற்பட்டது போன்று மழை கொட்டி தீர்த்துவிட்டது. உயிரிழப்புகளும் பொருளாதார சேதாரங்களும் கடுமையான அளவில் ஏற்பட்டிருக்க, தமிழகத்தில் 3 வது முறையாக மேட்டூர் அணை நிரம்பி வழிந்தும் கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை என்று விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

    Floods: Chennai yet to face the worst

    இந்நிலையில் சுற்று சூழலியல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராம் ஒன்இந்தியா தமிழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியின் போது சென்னைக்கு வெள்ள பேரபாயம் இருப்பதாக தெரிவித்தார். சூழல் மாற்றம் குறித்து விளக்கினார். அவரது பேட்டியிலிருந்து:

    தமிழ்நாட்டில் நீர் மேலாண்மை எந்த அளவில் உள்ளது?

    நீர் மேலாண்மைத் திட்டமே இங்கு இல்லையே. ஒருபுறம் கேரளாவில் வெள்ளம், முல்லைப்பெரியாறு நிரம்பி வழியுது ஆனால் ராமநாதபுரம், புதுக்கோட்டை போன்ற பகுதிகள் வறட்சியால் தவிக்கின்றன. குளங்களையும் ஆறுகளையும் சரியாக பராமரித்திருந்தால் பெய்த மழைக்கும், பெய்யவிருக்கின்ற மழயையும் தாங்கி ஆறுகள் குளங்களிலும் தண்ணீர் இருந்திருக்கும், அணையிலும் தண்ணீர் இருந்திருக்கும். அணையை திறப்பதும் மூடுவதும் அரசியல்மயமாகிவிட்டதால் திறமைவாய்ந்த பொறியாளர்கள் பொதுப்பணித்துறையில் இருந்தபிறகும் சிறப்பாக பணியாற்ற இயலவில்லை. இவை அரசியல் முடிவாக இல்லாமல் தொழில்நுட்ப முடிவாக இருத்தல் வேண்டும்

    ஒரே வருடத்தில் 3 வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியும் கடைமடைக்கு தண்ணீர் போகல அப்டின்னா பிரச்சனை எங்கே?

    எந்தெந்த விசயங்களில் அரசியல் முடிவு எடுக்கப்படவேண்டும், எவை எவற்றில் தொழில்நுட்ப முடிவு எடுக்க வேண்டும் என்ற தெளிவு வேண்டும். எந்தெந்த பகுதிகளுக்கு தண்ணீர் விட வேண்டும் என்ற அரசியல் முடிவு எடுக்கும்போது இப்படிப்பட்ட சம்பவங்கள் நேரும். டெல்டா பகுதிகளில் ஒரு சில இடங்களுக்கு ஏன் இன்னமும் தண்ணீர் விடப்படவில்லை என்பது இன்னமும் தெரியவில்லை அது அரசியல் உள்நோக்கம் இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் அரசின் செயல்பாடுகள் அவற்றை பாதிக்கும் அளவில் உள்ளது. இது நீண்ட கால அளவில் பார்க்கும்போது அபாயகரமானது.

    Floods: Chennai yet to face the worst

    இதற்கு என்ன தீர்வு இருக்க முடியும்?

    இதற்கு ஒரு தீர்வு அல்ல நிறைய தீர்வுகள் உள்ளன. நீருக்குரிய முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும். வளர்ச்சி என்பது நீர் இருந்தால் மட்டுமே சாத்தியம். நீரை கெடுத்து ஒரு திட்டம் தீட்டப்படுமேயானால் அது அழிவுதான். இப்போது நாம் வளர்ச்சி என்று கூறும் ஒவ்வொரு விசயமும் நீரை பாதிக்கின்றதாகவே இருக்கின்றது. அதற்கு பாரத் மாலா, சாகர்மாலா எட்டு வழி சாலை, ஸ்டெர்லைட் என்று என்ன பெயரிட்டு வேண்டுமானாலும் அழைக்கலாம். ஏற்கனவே தமிழகம் நீர் பற்றாக்குறையில் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது. இதற்கு நாம் செய்யும் செயல்கள் நீராதாரத்தை பெருக்கக் கூடியதாக, பாதுகாக்கக் கூடியதாக இருத்தல் வேண்டும். ஆனால் நம்முடைய செயல்கள் இதற்கு எதிர்மாறாகவே உள்ளன.

    நீராதாரங்களை வளர்க்கக் கூடிய செயல் என்று நீங்கள் குறிப்படும் செயல்கள் என்ன?

    பூமிக்குள் தண்ணீர் இறங்கினால்தான் நிலத்தடி நீர் இருக்கும். ஆனால் தண்ணீர் நிலத்தில் இறங்க முடியாத அளவில் அனைத்து இடங்களிலும் கான்க்ரீட் போட்டு மூடிவிட்டோம். மண்ணை மூடி கான்க்ரீட் போடுவதைத்தான் நாம் வளர்ச்சி என்று குறிப்பிடுகிறோம். இப்படி வளர்ச்சியின் அளவுகோல் மாற்றப்படமால் இருந்தால் நீர் பாதுகாப்பு என்பது வாய்ப்பே இல்லை.

    கான்க்ரீட் போடுவது போன்று வேறு என்னென்ன நாம் நம்மை அறியாமல் செய்கின்ற செயல் ... கேள்வியை முடிப்பதற்குள் ..

    தெரியாமல் எதுவும் செய்வதில்லை. புத்திசாலிகள்தான் நாம். தெரிந்தேதான் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்படுகின்றன. கன்னியாகுமரியில் உப்பளத்தில் ஏர்போர்ட் கட்டும் திட்டம் உள்ளது. இது போன்ற திட்டங்கள் நீர் தங்கும் இடங்களை பாதிக்கின்றன. இதை தவிர்த்தாலே நிலத்தடி நீர் ரீசார்ஜ் ஆகும், நீர் பற்றாக்குறைக்கு தீர்வு ஏற்படும், வெள்ளத்திலிருந்து பாதுகாப்பும் கிடைக்கும்.

    நீங்கள் குறிப்பிட்டது போல கன்னியாகுமரியில் குளங்களின் எண்ணிக்கை சுருங்கியிருப்பது உண்மைதான் அதே வேளையில் கட்டடங்கள் கட்டுவதும், வேறு விதமான வளர்ச்சியும் முக்கியம்தானே ?

    இயற்கையை அழித்து வருவது வளர்ச்சியல்ல. இப்போது எழுகின்ற முதல் கேள்வியே வளர்ச்சியா அல்லது தண்ணீர் தேவையா என்பதுதான். வளர்ச்சி என்ற பெயரில் குறிப்பிட்ட இடங்களுக்கு உச்ச நீதிமன்றத்திலிருந்தே அனுமதி பெற்றிருந்தாலும் தண்ணீர் வரும்போது அது செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றே தீரும். எதிர்காலம் தேவை என்றால் இயற்கையின் நியதிக்குள் நின்று வளருவதுதான் வளர்ச்சி.

    Floods: Chennai yet to face the worst

    கடந்த 2015 சென்னை வெள்ளம், இப்போது கேரளாவில் ஏற்பட்டிருக்கும் வெள்ளம் இதிலிருந்து தமிழக அரசு ஏதேனும் பாடங்கள் கற்றுள்ளதா?

    இதுவரை இல்லை, இனிமேலும் கற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கவும் முடியாது 2015 வெள்ளத்திற்கு பிறகு இந்நாள் வரை எண்ணூர் கழிமுகப் பகுதியில் மட்டும் நாம் 500 ஏக்கர் நிலப்பரப்பை நாம் இழந்துள்ளோம். இது அரசு இயந்திரத்தின் முக்கியஸ்தர்கள் அத்தனைபேருக்கும் தெரியும். சென்னையை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் இடத்தில் NTCL அனல் மின்நிலையம் எவ்வித சட்ட அனுமதியும் இல்லாமல் சாம்பலை கொட்டி வருகிறது. சாம்பல் கழிவுகளை கொட்டி ஆற்றை அழிகிறார்கள். அடுத்தது சாகர்மாலா என்ற பெயரில் அதானி குழுமம் வடசென்னையில் எண்ணூரை தாண்டி திருவள்ளுவர் மாவடத்தில் வளர்ச்சி என்ற பெயரில் கிட்டத்தட்ட 3000 முதல் 4000 ஏக்கர் வரை நிலத்தை ஆக்கிரமித்து வளர்ச்சியை ஏற்படுத்தப் போகிறதாம். ஆக கடந்த பேரிடர்களில் இருந்து அரசு எவ்வித பாடங்களையும் கற்றுக் கொள்ளவில்லை மாறாக மக்களிடமிருந்து பிடுங்கி முதலாளிகளுக்கு கொடுப்பதற்கு அரசு தயாராக உள்ளது.

    அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய பேரிடர்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், பெரும் அழிவுகளும் உயிர் சேதங்களும் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் பேரிடர் மேலாண்மைக் கழகம் தெரிவிக்கிறது, இதை எதிர்கொள்ள மக்கள் தயாராக உள்ளனரா, 2015 சென்னை வெள்ளம், கேரள வெள்ளம் இவற்றிலிருந்து மக்களிடம் ஏதேனும் மன மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

    மக்களிடமும், அரசு அதிகாரிகளிடத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் நாமும் பங்கு வகிக்கும் அரசு கூட்டமைப்பு என்பதில் மாற்றமில்லை. 10 வருடங்களு முன்னர் இது போன்ற வெள்ளம் வந்தால் அது இயற்கை பேரிடர் என்று கூறுவார்கள் ஆனால் இன்று அது மனிதனால் ஏற்படுத்தப் பட்ட பேரிடர் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரிகிறது. தவிர எந்த இடத்திலும் நீரைப் பாதுகாக்க அரசு முன்வரவில்லை மாறாக மக்கள்தான் போராடுகின்றனர். ஆனால் போராடும் மக்களை தேசத் துரோக வழக்குகளில் அரசு கைது செய்கிறது.

    ஒரு காலத்தில் நீர் மேலாண்மை செய்யும் வழக்கம் மக்களிடம் இருந்தது. இப்போது இந்த குடிமரமத்துப் பணிகளுக்கான அதிகாரம் மக்களிடம் இருக்கிறதா அல்லது அதுவும் அரசியல் மயமாக்கப்பட்டுவிட்டதா?

    சுதந்திர இந்தியாவில் இப்பணிகள் பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் வசமும் இந்த பணிகள் சென்றுவிட்டதால் மக்களுக்கும் நீர்நிலைகளுக்கும் இருந்த நெருக்கம் பாதிக்கப்பட்டு விட்டது. ஆனால் இது எளிதாக திருத்தப்படக் கூடியது இதற்கான ஒத்துழைப்பை தர மக்கள் தயாராகவே உள்ளனர்.

    பேரிடர்கள் வரும்போது அதன் தீவிரம் குறித்து பேசுகிறோம், அடுத்தடுத்த மாதங்களில் மறந்து விடுகிறோம், உங்களைப் போன்ற சூழலியல் ஆர்வலர்கள் மட்டுமே தொடர்ந்து பேசும் இந்நிலை மாறி மக்கள் எப்போது இதற்காக தொடர்ச்சியாக போராட போகிறார்கள்?

    மக்கள் இதற்கு மேல் போராடி அடி வாங்குதல் சாத்தியமில்லை. மக்களின் குரலை அரசு செவி மடுக்க வேண்டும். இதிலும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு வருடமும் பேரிடர்களை நமக்கு நினைவுப் படுத்தும் வகையில் பேரிடர்கள் வந்துகொண்டேதான் இருக்கும். அடுத்து வரும் மாதங்களில் அரசு அதிகாரிகளுக்கு கை நடுக்கம் கொடுக்க ஆரம்பிக்கும், மழை பெய்தால் பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் பிரச்சனை. மழை பெய்யவில்லை என்றால் மெட்ரோ வாட்டர் அதிகாரிகளுக்கு பிரச்சனை. ஆக இதுபோன்ற பிரச்சனைகள் வந்துகொண்டேதான் இருக்கும். தற்போது கேரளாவில் நடைபெற்ற பேரழிவு கற்றுத் தந்த பாடத்திற்கு அதிக அளவிலான விலை கொடுத்து விட்டோம் என்பதுதான் கவலைக்குரிய அம்சம்.

    சென்னையில் அரை மணி நேரம் மழை பெய்தாலே சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது இதற்கெல்லாம் என்ன தீர்வு?

    வேளச்சேரி, பெருங்குடி இந்தப் பகுதிகளுக்கு தீர்வு கிடையாது, இப்பகுதிகளில் இருப்பவர்கள் முக்கியமான பொருள்களை எடுத்து முதல் மாடிகளில் வைப்பதுதான் தீர்வு, அல்லது அந்த இடத்தை காலி செய்துவிட்டு வேறு இடங்களுக்கு செல்வதுதான் தீர்வு ஏனெனில் அந்த இடங்களில் பெரிய தவறுகளை செய்துவிட்டோம். ஏரிகளிலும், குளங்களிலும், சதுப்பு நிலங்களிலும் வீடுகளை கட்டிவிட்டு உடனடி தீர்வு என்றால் அது சாத்தியமில்லை. இதை தாண்டி தீர்வு என்றால் விரிவடைந்திருக்கும் நகரம் அங்கு சுருங்க வேண்டும். அதோடு இப்போது இருக்கின்ற நீராதாரங்களையாவது பாதுகாக்க வேண்டும். 24 மணி நேரமும் தண்ணீர் வேண்டும், மின்சாரம் வேண்டும் என்ற என்னத்தை மாற்றவேண்டும் ஏனெனில் இனிமேல் 24 மணி நேரமும் தண்ணீரும் மின்சாரமும் கிடைப்பதற்கான உத்தரவாதம் எதுவும் இல்லை. எனவே அதற்காக பழக வேண்டும். ஒரு பக்கத்தில் பெரிய பெரிய ஹோட்டல்களிலும், தொழிற்சாலைகளிலும் தண்ணீரை ஊதாரித்தனமாக செலவளிக்கின்றனர். அதே வேளையில் இன்னொரு பக்கத்தில் ஒரு குடம் தண்ணீருக்காக மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலை மாறி அனைவருக்கும் தண்ணீர் சமம் என்ற நிலை உருவாக வேண்டும்.

    இன்று வல்லவன் வாழ்வான் என்ற தியரியை தெரிந்தோ தெரியாமலோ எல்லோரும் ஏற்றுக்கொண்ட இந்த காலகட்டத்தில் அனைவருக்கும் சமமான தண்ணீர் என்ற நிலை எதார்தத்தில் சரி வருமா ?

    சரி வரவில்லை என்றால் எதிர்கால சிக்கல்களை சந்திக்க நாம் தயாராக வேண்டும்.

    இவ்வளவு பெரிய நெருக்கடியை குறைக்க அரசு உடனடியாக செய்ய வேண்டியது என்ன ?

    நீர்நிலைகள் பெரிய அளவில் எங்கெங்கெல்லாம் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதோ அவற்றை உடனடியாக அகற்றவேண்டும். மேலும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும். உடனடியாக நீர்நிலைகளை பராமரிக்க வேண்டும். வரும் பருவகாலத்திற்கு ஏற்ற வகையில் நீர் நிலைகளை பராமரித்தாலே பாதிப்புகள் குறைந்து விடும்.

    இருக்கின்ற மெட்ரோபொலிட்டன் நகரங்களில் சென்னையின் வளர்ச்சி செங்குத்தாக இல்லாமல் கிடைமட்டமாகத்தான் இருக்கிறது. இது போனறு நகரமயமாக்கலை தவிர்க்க முடியுமா ?

    தவிர்க்க முடியும். தண்ணீர் காலியானதும் நகரமயமாக்கல் முடிந்து விடும். ஒன்று இயற்கை உங்களை நிறுத்தும் அல்லது நீங்களே நின்று விடுவீர்கள். கிராம மக்களை மக்களாக பார்க்காமல் அவர்களை கூலிகளாக பார்த்து அங்கிருந்து அவர்களை இடம்பெயர வைத்து நகரங்களுக்கு வரவைத்து நகரத்தில் நெருக்கடியாக்குகிறோம். இதைத்தான் வளர்ச்சி என்கிறோம். ஒரு நகரத்திற்கான வளர்ச்சி என்பது 1000 வருடங்களுக்கான திட்டமிடல் என்றால் அதை திறன்மிக்கது என்று கூறலாம் ஆனால் நம்மிடம் இருப்பது 5 வருட அரசியல் 20 வருடங்களுக்கான திட்டமிடல். இந்த 20 வருடங்களில் தப்புசெய்து விட்டீர்கள் என்றால் அடுத்த 40 வருடங்கள் என்ன செய்வீர்கள் அதன் பிறகு எதிர்காலம் இல்லையா என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.

    நீங்கள் சொல்வதை பார்க்கும்போது அனைத்து துறைகளிலும் மாற்றம் வந்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்ற பதில்தான் தெரிகிறது. இது உடனடியாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியிலோ நடப்பதற்கு சாத்தியம் உள்ளதா ?

    உடனடி தீர்வு இல்லை ஆனால் அடுத்த 10 ஆண்டுகளில் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது அதற்கான விதைதான் இப்போது தூவப்படுகிறது. இதுவரை கூறப்பட்டு வந்த வளர்ச்சி தவிர்க்க முடியாதது என்ற கருத்து மாற்றப்படவேண்டும். வளர்ச்சி தவிர்க்க முடியும், தவிர்க்கப் படவேண்டும். உடனடியாக சட்டம் சொல்லக்கூடிய எளிதான விசயங்களை செய்தாலே போதுமானது, ஏரிகளை அழித்து கட்டடங்கள் கட்டாதீர்கள், ஆற்றில் சாம்பலை கொட்டாதீர்கள் இதற்கு அரசு செவிமடுத்தாலே போதுமானது.

    காவிரிப் பிரச்சனையில் அரசுக்கும் எதிர்கட்சிகளுக்கும் நீர் மேலாண்மை கற்றுள்ளீர்களா என்ற வார்த்தைப் போர்தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது இதை தாண்டி மக்கள் குறைந்தபட்சம் பாதுகாப்பாக இருக்க செய்ய வேண்டிய விசயங்கள் என்ன ?

    வருகின்ற பருவமழை அதிகமாக பெய்தால் பாதுகாப்பாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் நாம் செய்துள்ள தவறுகள் பெரிது. குறைந்தபட்சம் மாடிகளில் தஞ்சமடைவது அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிடுவது போன்றவற்றைத்தான் செய்ய முடியும். அடுத்த 10 ஆண்டுகளிலாவது நீருக்கான இடங்களை கொடுத்துவிட முயற்சி செய்ய வேண்டும். நீருக்கான இடங்கள் எவை எவை என்று நீரே சொல்லும்.

    இது போன்ற பேரிடர்கள் வந்தால் சென்னையில் மிகவும் ரிஸ்கான இடங்கள் எவை எவை ?

    IT காரிடார்கள், கிண்டி தொழிற்பேட்டை, மாதவரம், வடசென்னையில் ரயில்வே ட்ராக்கிற்கு மேல் உள்ள பகுதிகள், விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள் போன்றவை மிகவும் பாதிப்பை சந்திக்கும் பகுதிகள்.

    இது ரொம்ப ரிஸ்கான இடங்கள் அப்டின்னு சொன்னீங்க, சில தசாப்தங்களாக நாம் செய்த தவறு இதை சரி செய்ய அடுத்த பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்ற நிலையில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு சென்னைக்கு ஏற்படவிருக்கும் பேரிடர்களை நாம் தவிர்க்க முடியாது இல்லையா ?

    ஆமா தவிர்ப்பது கடினமானது. பேரிடரை தவிர்க்க முடியாது ஆனால் தாக்கத்தை குறைக்க முடியும். வளர்ச்சி என்பதை விட நீருக்கான மதிப்பை அதிகமாக கொடுக்க கொடுக்க இந்த துன்பங்களை தவிர்க்க முடியும் என்கிறார் நித்யானந்த் ஜெயராம்

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+