விஸ்வரூபம் எடுக்கும் குட்கா ஊழல்.. உணவு பாதுகாப்பு அதிகாரி அதிரடி கைது
சென்னை: சென்னை செங்குன்றம் அருகே உள்ள குட்கா குடோனில் கடந்த 2016ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. 250 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கு கைப்பற்றப்பட்ட டைரியில் அமைச்சர் விஜய பாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றிருந்தன. அதோடு போலீஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, கலால் துறை அதிகாரிகளின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.
இந்த விவகாரம் குறித்து மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணை ஹைகோர்ட்டு உத்தரவால் சிபிஐக்கு மாற்றப்பட்டது.
குட்கா ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் விஜய பாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், புழல் உதவி கமிஷனராக பணிபுரிந்த மன்னர்மன்னன், செங்குன்றத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த சம்பத் ஆகியோரது வீடு உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடத்தியது சிபிஐ.
விசாரணையை தொடர்ந்து, குட்கா வியாபாரி மாதவராவ் பங்குதாரர்கள் குமார் சங்கர் குப்தா, சீனிவாசராவ், மத்திய கலால்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
வருமான வரித்துறையினர் குட்கா குடோனில் ரெய்டு நடத்திய காலகட்டத்தில் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். அப்போது பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த சிவகுமாருக்கு அனுப்பி வைத்தனர். அதை சோதித்து இது உண்மையான போதைப் பொருளா, இல்லையா என்று கேட்டபோது, இதில் போதைப் பொருளே இல்லை என்று அறிக்கை அளித்தார்.
இந்த அறிக்கை காரணமாகத்தான் குட்கா விவகாரம் தொடர்பாக மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் இதை சுட்டிக்காட்டி இந்த அறிக்கை காரணமாகத்தான் தங்களால் குட்கா தயாரிப்பாளர்களுக்கு .எதிராக நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான் பொய்யான அறிக்கை அளித்த குற்றச்சாட்டு தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சிவகுமாரை சிபிஐ கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 4ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது.