செஸ் ஒலிம்பியாட்.. சாப்பாடு தரமா இருக்குதா இல்லையா.. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு!
செங்கல்பட்டு : செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று வரும் மாமல்லபுரத்தில், வெளிநாட்டு வீரர்கள் தங்கியுள்ள நட்சத்திர விடுதிகளின் உணவு கூடங்களில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர்.
சென்னை மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், கடந்த 28-ம் தேதி தொடங்கியது. தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த பிரமாண்ட போட்டித் தொடர், வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி நிறைவடைகிறது. இந்த போட்டி தொடரில், 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
போட்டியின் தொடக்க விழா அண்மையில் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், போட்டியில் பங்குபெறும் அனைத்து நாட்டினருக்கும் எந்தவித குறையும் இல்லாமல் இருகும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதேபோல், போட்டியை கண்டுகளிக்க வந்திருக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் மிகவும் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
சுற்றுலா பயணிகள் மற்றும் செஸ் விளையாட்டு வீரர்கள் இலவசமாக பயணம் செய்வதற்கு வசதியாக 10 சொகுசு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. மாமல்லபுரத்தில் இருந்து 5 பேருந்துகளும், சென்னை அடையாறில் இருந்து 5 பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று வரும் மாமல்லபுரத்தில், போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள் 23 நட்சத்திர விடுதிகளில் தங்கியுள்ளனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் தமிழக அரசு சார்பில் செய்து தரப்படுகின்றன. அந்த வகையில் அவர்களுக்கு சுமார் 3,500 வகையான உணவிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
இதற்காக 77 மெனு கார்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த உணவு ஏற்பாடுகளுக்காக இந்தியாவின் முன்னணி சமையற்கலைஞரான 50 ஆண்டுகால அனுபவமிக்க சென்னையைச் சேர்ந்த ஜி.எஸ். தல்வார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய உணவுகளை ருசித்த அயல்நாட்டு விளையாட்டு வீரர்கள், அது மிகவும் சுவையாக இருப்பதாக தங்களது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர். வெளிநாட்டு வீரர்கள், மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்கியுள்ள நட்சத்திர விடுதிகளின் உணவு தயாரிக்கும் கூடங்களுக்குச் சென்ற அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். உணவு கூடங்களில் காலாவதியான உணவுப் பொருட்கள் ஏதேனும் உள்ளனவா என்றும் ஆய்வு நடத்தினர்.