ராஜ்யசபா எம்பி: தேர்தலில் தோற்றும் பீனிக்ஸ் பறவையாய் எழுந்த ஐவர் அணி வைத்திலிங்கம்!
சென்னை: சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் ஐவர் அணியில் இடம்பெற்றவருமான வைத்திலிங்கம் ராஜ்யசபா எம்.பிக்கான தேர்தலில் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அதிமுகவில் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், ஆகியோர் கொண்ட ஐவரணி, செல்வாக்கோடு திகழ்ந்தது.
சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, அதிமுக கூட்டணி கட்சிகளுடனான பேச்சை துவக்கியது. அப்போது, முதல்வருடன், ஐவரணியில் இடம் பெற்றிருந்த, அமைச்சர்கள் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, ஆகியோருடன் புதிதாக, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் இருந்தனர்.

இருவர் அணி
அதைத் தொடர்ந்து, ஐவர் அணி நால்வர் அணியாக மாறிவிட்டதாக பேச்சு எழுந்தது. இந்நிலையில், போயஸ் கார்டனில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், முதல்வரை சந்தித்து பேசினார். அப்போது, அமைச்சர்கள் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி மட்டும் இருந்தனர். அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஆகியோர் பங்கேற்கவில்லை.

சந்தேகம்
அதேபோல், புதுச்சேரி மாநில தேர்தல் பணி குறித்த ஆலோசனைக் கூட்டத்திலும், அமைச்சர்கள் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, அம்மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட, அமைச்சர் சம்பத் மட்டும் பங்கேற்றனர். இதனால், ஐவர் அணி, நால்வர் அணியாகி, பிறகு, இருவர் அணியாக மாறி விட்டதோ என்ற சந்தேகம் கட்சியினரிடம் ஏற்பட்டது.

நம்பிக்கைக்கு உரியவர்
ஐவர் அணியோ, இருவர் அணியோ, வைத்திலிங்கம் மட்டும் அதில் இடம்பிடித்திருந்தார். அந்த அளவுக்கு ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் வைத்திலிங்கம். இந்நிலையில், சட்டசபை தேர்தலின்போது, ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கம் போட்டியிட்டார்.

தோல்வி
வைத்திலிங்கம், திமுக வேட்பாளர் ராமச்சந்திரனிடம் 3642 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதையடுத்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வைத்திலிங்கம் ஆட்டம் க்ளோஸ் என்று அவரது அரசியல் எதிரிகள் நினைத்திருந்தனர். ஆனால், ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தலில் வைத்திலிங்கத்தை களமிறக்கியுள்ளார் ஜெயலலிதா.

வெற்றி உறுதி
அதிமுகவின் எம்எல்ஏக்கள் பலம் அடிப்படையில், இத்தேர்தலில் வைத்திலிங்கம் வெற்றி பெற வாய்ப்பு பிரகாசம். எனவே தேசிய அரசியலில் வைத்திலிங்கம் கவனம் செலுத்த உள்ளார்.












Click it and Unblock the Notifications