1-2-3.. சுதாகரன், தினகரன், பாஸ்கரன்.. வரிசையாக கம்பி எண்ணும் போயஸ் கார்டன் செல்லப்பிள்ளைகள்!
போயஸ்கார்டனில் செல்லப்பிள்ளையாக வலம் வந்த சுதாகரன், தினகரன், பாஸ்கரன் ஆகிய மூவருமே இப்போது வரிசையாக சிறைக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்
சென்னை: சசிகலாவின் அக்காள் மகன்கள் தினகரன்,பாஸ்கரன், சுதாகரன் ஆகிய மூவரும் போயஸ் கார்டன் வீட்டில் செல்லப்பிள்ளையாக வலம் வந்தவர்கள். இதில் சுதாகரன் பெங்களூர் சிறையில் காலம் தள்ளுகிறார். தினகரன் டெல்லியில் திகார் சிறையில் குடித்தனம் புகுந்துள்ளார். ஃபெரா வழக்கில் பாஸ்கரன் மீதான பிடி இறுகியுள்ளது.
சசிகலாவின் அக்கா வனிதாமணி - விவேகானந்தன் தம்பதியின் மூத்த மகன் டிடிவி தினகரன். இரண்டாவது மகன் பாஸ்கரன், மூன்றாவது மகன் சுதாகரன்.
சசிகலா மூலமாக கார்டனுக்குள் நுழைந்து, ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளைகளாக வலம் வந்தனர்.
மூவரில் இருவர் இப்போது சிறையில் இருக்கின்றனர். பாஸ்கரன் மீதான ஃபெரா வழக்கு கழுத்துக்கு மேல் கத்தியாக தொங்கி வருகிறது.
டிடிவி தினகரன்
டிடிவி தினகரன் பற்றி கடந்த வாரங்களில் அதிகம் பார்த்து விட்டோம். அவர் அரசியல் ஆசையில் அதிமுக பொருளாளர் ஆனது முதல் எம்.பியாகி அவர் ஆடிய ஆட்டத்தால் கார்டனை விட்டு விரட்டப்பட்டு அடையாளமற்று இருந்தார். ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் மீண்டும் அதிமுக துணை பொதுச்செயலாளரானார். 72 நாட்களில் லஞ்ச வழக்கில் சிக்கி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜெ.ஜெ.டிவி பாஸ்கரன்
தொன்னூறுகளில் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியை மறக்காத யாராலும் அத்தனை சுலபத்தில் மறக்க முடியாத நபர் இந்த பாஸ்கரன். பாஸ் என்கிற பாஸ்கரன் என்பதுதான் இப்போது அவர் முழுப் பெயர். ஜெ.ஜெ டிவி பாஸ்கரன் என்றால் அனைவருக்கும் தெரியும். ஜெயலலிதா ஓரம்கட்டிய பின்னர் ஆந்திராவில் குவாரி தொழிலில் தன்னை பிசியாக்கிக் கொண்டார் பாஸ்கரன். ஜெ.ஜெ. டிவி நிர்வாகத்தில் இருந்தபோதிலிருந்து சினிமா மோகம் பாஸ்கரனை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது.
தலைவன் பாஸ்கரன்
1995ம் ஆண்டு அன்னிய செலாவணி விவகாரத்தில் இவரை அமலாக்கப் பிரிவினர் கைது செய்தனர். ரிம்சாட் என்ற செயற்கைக் கோள் நிறுவனத்துக்கு 6.8 லட்சம் டாலர் பணத்தை இவர் பறிமாற்றம் செய்ததாக அப்போது புகார் கூறியது அமலாக்கப் பிரிவு. பின்னர் அந்த வம்பு வழக்குகளில் இருந்தெல்லாம் வெளியே வந்து மிக மிக அமைதியாக இருந்தார். பின்னர் சினிமா ஹீரோவானார். அவர் ஹீரோவாக நடித்த ஒரே படத்தின் போஸ்டர்களைத்தான் அவ்வப்போது ஒட்டி வருகின்றனர். ஆனால் படம்தான் ரிலீஸ்ஆகக் காணோம். இப்போது அவர் மீதான ஃபெரா வழக்கு இறுகி வருகிறது. அவர் மீதான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று தண்டனை கிடைக்கும் பட்சத்தில் விரைவில் இவரும் சிறை செல்வார்.
வளர்ப்பு மகன் சுதாகரன்
சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மூன்றாவது மகன் சுதாகரன். தன் அக்காள் பிள்ளைகளில் சுதாகரன் மீதுதான் சசிகலாவுக்குக் கொள்ளைப் பிரியம். அந்தப் பிரியம்தான் வளர்ப்பு மகனாக ஜெயலலிதா தத்து எடுக்கக் காரணமாக அமைந்தது. இந்தியாவே வாய்பிளக்கும் அளவுக்கு ரூ.6 கோடி செலவில் பிரமாண்டமாக சுதாகரனுக்கும் நடிகர் சிவாஜி கணேசன் பேத்தி சத்தியலட்சுமிக்கும் திருமணம் செய்துவைத்தார். அதுவே 1996 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவின் தோல்விக்குக் காரணமாகவே, சுதாகரனை விரட்டியடித்தார் ஜெயலலிதா.
சின்ன எம்.ஜி.ஆர்
தி.மு.க. ஆட்சியில்'சின்ன எம்.ஜி.ஆர்.' என்று அடைமொழியை சூட்டிக்கொண்டு ஆடம்பரத்தோடு வலம் வந்தார். 2001ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததுமே சுதாகரனின் தியாகராயநகர் வீட்டிலும் அபிராமபுரத்தில் உள்ள அலுவலத்தில் அதிரடியாக நுழைந்த போலீஸ் ஹெராயினைப் பறிமுதல் செய்து கைது செய்தது. துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தாகவும் வழக்கு கடுமையாக்கப்பட்டது. 108 நாட்கள் சிறையில் இருந்தார் சுதாகரன். தனது பெயரை 'சுதாகர்', 'விவேக சுதாகர்' என்றெல்லாம் மாற்றிப் பார்த்தார் சுதாகரன்.
பெங்களூரு சிறையில்
20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பூஜை, யாகம் நடத்தியும் புண்ணியமில்லை. சிறையிலேயே இப்போது யாகம் வளர்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
3 பேருமே சிறையா?
தன்னுடைய மகன்கள் சுதாகரன், தினகரன் அடுத்தடுத்து சிறைக்குப் போனதில் கவலையில் இருக்கிறாராம் தினகரனின் அப்பா விவேகானந்தன். இப்போது பாஸ்கரன் மீதான பிடியும் இறுகுவதைப் பார்த்து மன்னார்குடி சொந்தங்களிடம் புலம்பி வருகிறாராம்.
காலம் செய்யும் கோலம்
1990களில் போயஸ் கார்டன் வீட்டு செல்லப்பிள்ளைகளாக வலம் வந்து அதிகார மையத்தில் நுழைந்து கோடிக்கணக்கில் சம்பாதித்த கட்டுக்கட்டாக எண்ணிய இந்த மூன்று சகோதரர்கள் வரிசையாக இப்போது 1...2.... 3... என்று கம்பி எண்ணிக்கொண்டிருக்கின்றனர். எல்லாம் காலம் செய்த கோலம்தான். வேறென்ன சொல்ல.