பலரை ஏமாற்றி நகை பறித்த 6 பெண்கள் உள்பட 11 பேர் கைது: நகை, பணம், 6 பைக் பறிமுதல்
வேலூர்: வேலூரில் நூதன முறையில் நகை பறித்து வந்த 6 பெண்கள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூரைச் சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரியான பரசுராமன். அவரது மனைவி மலர்க்கொடி(26). அவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது 2 வாலிபர்கள் பைக்கில் வந்து தண்ணீர் கேட்டுள்ளனர். அவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்த மலர்க்கொடி தனது உடல்நிலை பாதிக்கப்பட்டது, குடும்ப நிலவரம் ஆகியவை பற்றி தெரிவித்துள்ளார்.
உடனே அந்த வாலிபர்கள் உங்கள் குடும்பத்தார் யாரோ மாந்திரீகம் செய்திருக்கிறார்கள். அதற்கு தோஷநிவர்த்தி செய்ய நகை இருந்தால் கொடுங்கள், நாங்கள் தோஷத்தை போக்குகிறோம் என்று தெரிவித்தனர். அவர்களின் பேச்சை நம்பி மலர்க்கொடி வீட்டில் இருந்த ஒன்றரை பவுன் நகைகளை அந்த 2 பேரிடம் கொடுத்துள்ளார். நகையை கொடுத்த சிறிது நேரத்தில் மயங்கிய மலர்க்கொடி கண் விழித்தபோது வாலிபர்களும் இல்லை, நகையும் இல்லை.
இதையடுத்து பரசுராமன் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதற்கிடையே பரசுராமனின் உறவினர்கள் வேப்பங்குப்பம் அருகே சந்தேகப்படும்படி சுற்றிய 2 வாலிபர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் கிருஷ்ணகிரியை அடுத்த காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த கோபி (20), மணிகண்டன் (20) என்பது தெரிய வந்தது. அவர்கள் அளித்த தகவலின்பேரின் அவர்களின் கூட்டாளிகளான பாவோடும் தோப்பைச் சேர்ந்த செல்வம் (20), விஜய் (20), முருகன் (20), ஆறுமுகம் (27), லட்சுமி (45), ராணி (40), வள்ளியம்மாள் (40), சித்தம்மாள் (60), எல்லம்மாள் (45), மாதம்மாள் (40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் பல்வேறு இடங்களில் நகைகள் பறித்துள்ளது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 5 பவுன் நகைகள், ரூ.4 ஆயிரத்து 500 ரொக்கம் மற்றும் 6 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.