பழைய இரும்புக் கடைக்கு செல்லும் 'அம்மா' கொடுத்த இலவச மிக்சி, கிரைண்டர்
நெல்லை: தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பொது மக்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர் வழங்கியது. இவை தரமற்று இருப்பதாக ஆரம்பத்திலேயே புகார் எழுந்தது. தற்போது மிக்சிகள் பழைய இரும்புக் கடைகளுக்கு வருவதால் வருவாய் துறையினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியில் தமிழக அரசு சார்பில் ஏழை குடும்பங்களுக்கு இலவச மிக்சி, மின்விசிறி, கிரைண்டர் வழங்கப்பட்டது. இதில் பல பொருட்கள் உடைந்தும், பழுதாகியும் இருந்ததாக பொதுமக்கள் வருவாய்த் துறையினரிடம் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
இந்த புகார் குறித்து தலைமை செயலகத்திற்கு தெரிவிக்கப்பட்டதால் உடனடியாக சிறப்பு திட்ட செயலாக்க அதிகாரிகள் நாங்குநேரிக்கு விரைந்து வந்து முகாமிட்டு வீடு வீடாக சோதனையிட்டு பழுதடைந்த சாதனங்களை சீரமைத்து கொடுக்க தற்காலிக ஏற்பாடுகள் செய்தனர். இந்த நிலையில் பெரும்பாலான வீடுகளில் இலவச கிரைண்டர்கள் பழுதாகி கிடப்பதால் அவற்றை மூட்டை கட்டி மூலையில தூக்கி போட்டுள்ளனர். மேலும் பலர் பழைய இரும்புக் கடைக்கு அவற்றை குறைந்த விலையில் விற்று வருகின்றனர்.
அதனை வாங்கும் வியாபாரிகள் பழைய இரும்புக் கடையின் முன் வைத்து சுத்தியலால் உடைத்து பகுதி பகுதியாக கழற்றி எடை போட்டு விற்பனை செய்கின்றனர். தமிழக அரசால் வழங்கப்பட்ட இலவச பொருட்கள் இரண்டு ஆண்டுகள் கூட சரிவர இயங்காமல் பழைய கடைக்கு போவதால் பொதுமக்கள் அதிருப்தியில் உளளனர். இந்த தகவலால் வருவாய் துறையினர் அதிர்ந்து போய் உள்ளனர்.