28ம் தேதி திருச்சியில் மாநாடு: புது கட்சி பெயர், கொள்கைகள் வெளியீடு- வாசன் அறிவிப்பு
சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கடந்த 3ம் தேதி சென்னையில் தனது ஆதரவாளர்களை திரட்டி, புதிய கட்சி தொடங்கப் போவதாக முதலில் அறிவித்தார். புதிய கட்சிக்கான பெயர் மற்றும் கொடியை திருச்சியில் நடத்தப்படும் பொதுக் கூட்டத்தில் அறிவிக்கப் போவதாகவும் கூறினார்.
இதையடுத்து, காங்கிரசில் இருந்து பிரிந்து வந்த இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஜி.கே.வாசன் ஆலோசனை நடத்தி வந்தார். இன்று தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மயிலாப்பூரில் ஜி.கே.வாசன் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் ஜி.கே.வாசன் பேசியதாவது: அன்பு, பாசம் நிறைந்த மகளிரணியினர் நம்மிடம்தான் உள்ளனர். தமிழ்நாட்டில் எந்த ஒரு இயக்கத்திலும் இல்லாத எழுச்சி நம் இயக்கத்தில் உள்ளது. கடந்த காலங்களில் மூப்பனாருடன் உழைத்தவர்களுக்கு பதவிகள் தானாக கிடைத்தன. அதேபோல் இளைஞர்கள், மாணவர்கள், மகளிர் அணியினர்களுக்கு பதவி, அதிகாரங்கள் கண்டிப்பாக கிடைக்கும்.
வருங்காலத்தில் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைப்பதுதான் என்னுடைய லட்சியம். வளமான தமிழகம், வலிமையான பாரதம் உருவாக்க நாம் பாடுபடுவோம். நமது கட்சியில்தான் இளைஞர்கள், மாணவர்கள், மகளிர் அணியினர் அதிகம் பேர் சேர்ந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 7 கோடியே 20 லட்சம் மக்கள் உள்ளனர். இதில் 3 கோடியே 50 லட்சம் பேர் பெண்கள். இதில் பெண் வாக்காளர்கள் 2 கோடியே 20 லட்சம் பேர் உள்ளனர். எனவே பெண்களின் அரசியல் பங்கு முக்கியமாகும். நாம் தொடங்கும் புதிய கட்சியின் பொதுக்கூட்டம் திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் 28ம் தேதி நடைபெறுகிறது.
காமராஜர் ஆட்சியில் 8 அமைச்சர்களில் 2 பேர் பெண்கள். அதேபோல் நமது கட்சியிலும் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படும். பதவிகளும், பொறுப்புகளும் வழங்கப்படும். 33 சதவீத இட ஒதுக் கீட்டை அளிக்க வேண்டும் என்பதை நாங்கள் அடிமனதில் இருந்து பேசுகிறோம்.
திருச்சியில் 28ம் தேதி நடத்தப்படும் பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள். திருச்சி பொதுக்கூட்டம் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டமாக அமையும். இந்த கூட்டத்தில் கட்சியின் பெயர், கொள்கை கோட்பாடு அனைத்தும் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், கோவை தங்கம், முக்தா சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.