அகதிகள் முகாமில் நடமாடும் பேய்: பீதியில் அலறும் மக்கள்
மானாமதுரை: மானாமதுரை அகதிகள் முகாமில் பேய் நடமாடுவதாக எழுந்த பீதியால் பொதுமக்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர். பேய் தங்கியிருப்பதாக கூறப்படும் பலாமரத்தை வெட்ட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மானாமதுரை மூங்கில் ஊரணியில் 250 இலங்கை தமிழர்கள் குடும்பத்தினர் வசிக்கின்றனர். சுற்று வட்டார பகுதிகளில் கூலி வேலை செய்து பிழைத்து வரும் இவர்கள் மாலை 7மணிக்கு மேல் வீடு திரும்புவது வழக்கம்.
கடந்த மாதம் 23ம் தேதி அகதிகள் முகாமை சேர்ந்த ஜோசப் பல்வேடானா என்பவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் முகாமில் உள்ள பலா மரத்தில் ஏறி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
உலா வரும் ஆவி
மரணத்திற்குப் பின்னர் அவரது ஆன்மா சாந்தியடையாமல் ஆவியாக உலா வருகிறார் என்று முகாம் மக்கள் நம்பத்தொடங்கியுள்ளனர். இதனால் இரவு நேரங்களில் அவர்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.
முடங்கிய மக்கள்
தற்கொலை செய்து கொண்ட மரத்தின் அருகில் முகாமிற்கான குடிநீர் குழாய் அமைந்துள்ளது. இச்சம்பவத்தால் குடிநீர் பிடிக்க பொதுமக்கள் அஞ்சி வருகின்றனர். மாலை ஆறு மணிக்கு மேல் யாரும் வீட்டை விட்டு வெளியே வருவது இல்லை. வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர்.
மரத்தில் இருக்கிறார்
இதுகுறித்து ஆவியாக வருபவரின் மனைவி பெரியண்ணா கூறுகையில் அவர் தற்கொலை செய்து கொண்டது காலையில்தான் தெரியும் தற்போது எப்போது பார்த்தாலும் அவர் மரத்தின் மீது இருப்பது போல தெரிகிறது. மாலை நேரத்தில் அவர் வருகிறார் என யாரும் தண்ணீர் பிடிக்க கூட வருவதில்லை என்றார்.
பலாமரத்தை வெட்டுங்கள்
சரோஜா என்பவர் கூறுகையில் ஜோசப் இறந்ததில் இருந்து மாலையில் யாரும் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை, வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றோம், எனவே இந்த பலாமரத்தை அகற்ற வேண்டும் என்றார். பலா மரத்தை அகற்றினால் மட்டுமே தங்களின் பீதி குறையும் என தெரிவிக்கின்றனர் முகாம் மக்கள்.