திமுக கூட்டணியில் காங்.க்கு 41 தொகுதிகள்; கருணாநிதி- குலாம்நபி ஆசாத் சந்திப்பில் உடன்பாடு!!
சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னையில் இன்று திமுக தலைவர் கருணாநிதியுடன் மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் நடத்திய பேச்சுவார்த்தையில் இதற்கான உடன்பாடு ஏற்பட்டது.
சட்டசபை தேர்தலில் திமுக-காங்கிரஸ் இடையே பிப்ரவரி 13-ந் தேதி கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மார்ச் 25-ந் தேதி தொகுதி பங்கீடு தொடர்பாக கருணாநிதியை குலாம்நபி ஆசாத் தலைமையிலான காங்கிரஸ் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தியை ஆகியோரைச் சந்தித்து ஆலோசித்து வருவதாக குலாம் நபி ஆசாத் சென்றார்.
இதனிடையே குலாம் நபி ஆசாத்துடன் கருணாநிதி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ராஜ்யசபா எம்.பி கனிமொழி மூலமாக சென்னையில் இருந்தவாறே பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இதில், இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு எட்டியுள்ளது.
இந்த நிலையில் குலாநம்பி ஆசாத் நேற்று இரவு சென்னை வருகை தந்தார். பின்னர் இன்று காலை 9 மணியளவில் அவர் கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது திமுக பொருளாளர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன், மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அப்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதற்கான உடன்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கருணாநிதியும் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவனும் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் 63 இடங்களை காங்கிரஸ் பெற்றிருந்தது. இம்முறையும் அதே தொகுதிகளை காங்கிரஸ் கோரியது. ஆனால் இதனை திமுக நிராகரித்தது. 25-30 தொகுதிகள்தான் ஒதுக்க முடியும் என கூறி வந்த திமுக தற்போது 41 தொகுதிகளை காங்கிரஸுக்கு வாரி வழங்கியுள்ளது.
இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குலாம்நபி ஆசாத், தமிழக சட்டசபை தேர்தலில் திமுக- காங் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், இன்று மாலை முதல் போட்டியிடக் கூடிய தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும். தமிழகத்தில் அதிமுக ஆட்சியை திமுக கூட்டணி அகற்றி சாதிக்கும் என்றார்.