ரஜினிகாந்த் ஆதரவு எங்களுக்கே..!- விடாப்பிடியாக கேட்கும் வாசன்
சென்னை: புதிய கட்சி தொடங்கவிருக்கும் ஜிகே வாசன், தொடர்ந்து ரஜினியின் ஆதரவைக் கேட்டு பேட்டிகள் கொடுத்து வருகிறார்.
காங்கிரசில் இருந்து விலகி புதிய கட்சித் தொடங்கியுள்ள ஜி.கே.வாசன், அந்த கட்சிக்கு என்ன பெயர் சூட்டுவது என்று தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
அடுத்த வாரம் அந்த புதிய கட்சியின் பெயர் அறிவிக்கப்பட உள்ளது. புதிய கட்சிக்கான கொடி எப்படி இருக்கும் என்பதும் அப்போது தெரியவரும்.
புதிய கட்சிக்கான பெயர் முடிவு செய்யப்பட்டதும் திருச்சியில் கட்சி தொடக்க விழா கூட்டத்தை நடத்தும் தேதி அறிவிக்கப்படும்.
புதிய கட்சியின் தொடக்க விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்த வாசன் திட்டமிட்டுள்ளார். குறைந்தபட்சம் 2 லட்சம் பேர்களையாவது திரட்ட வேண்டும் என்பது அவர்களது இலக்காகும்.
இதற்காக மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்ட வாசன் ஆதரவாளர்கள் வியூகம் வகுத்துள்ளனர். அதன்படி வாசன் இன்று ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து ஆதரவு திரட்டினார்.
இதற்கிடையே தனது கட்சியை மக்களிடம் பதிய வைக்கவும், மக்களைக் கவரவும் பிரபலங்களின் உதவியை நாடுகிறார் வாசன். கட்சி தொடங்க முடிவெடுத்த உடனே அவர் ரஜினியின் ஆதரவு வேண்டும் என்றார்.
ரஜினி தரப்பில் எந்த ரியாக்ஷனும் இல்லை. இருந்தாலும் மீண்டும் அவர் ரஜினியின் ஆதரவைக் கேட்டுள்ளார்.
மதுரையில் அவர் நிருபர்களிடம் பேசுகையில், "சூப்பர் ஸ்டார் ரஜினி மிகவும் புகழ்பெற்றவர். எல்லாராலும் விருயிம்பப்படுபவர். அவர் எங்கள் புதிய கட்சிக்கு ஆதரவு தந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.
ரஜினி போன்ற பிரபலமான, மரியாதைக்குரிய சமுதாயப் பெரியவர்களை எங்கள் கட்சிக்கு வருமாறு அழைக்கிறேன். எதிர்காலத்தில் எங்கள் கட்சி, பிரபலமானவர்களுடன் இணைந்து செயல்படும். இதற்கான திட்டங்கள் வகுக்கப்படும்".
ரஜினி அரசியலுக்கு வரக் கூடாது என்று சமீபத்தில்தான் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேண்டு கோள் விடுத்து நினைவிருக்கலாம். அதற்காகவே மீண்டும் வாசன் அழைப்பு விடுத்தார் போலிருக்கிறது.