பலே வெள்ளையத்தேவா... இந்த ரணகளத்திலயும் நைசா ஒரு கூட்டணியை அமைச்சிட்டாரு பாருங்க வாசன்!
சென்னை: ஓ.பி.எஸ். அணிக்கு ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஆதரவு அளிப்பதாக கூறியுள்ள தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இந்தக் "கூட்டணி" உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என்றும் கூட்டத்தோடு கூட்டமாக அறிவித்து விட்டார். அதாவது அடுத்த தேர்தலை சந்திக்க இப்போதே ஒரு கூட்டணியை அமைத்து விட்டார் வாசன்.
எல்லோரும் தொப்பி ஜெயிக்குமா, மின்கம்பம் ஜெயிக்குமா, படகு என்னாகுமோ, சூரியன் உதிக்குமா என்ற கவலையில் இருக்கும்போது நைஸாக போய் கூட்டணியை ஏற்படுத்தி விட்டு வந்துள்ள வாசனை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை.
ஓ.பி.எஸ்ஸுக்குப் பொன்னாடை போர்த்திய கையோடு கூட்டணியையும் ஏற்படுத்தி விட்டுத் திரும்பியுள்ள வாசன் முகத்தில் பெரும் நிம்மதிப் பெருமூச்சையும் காண முடிந்தது.
கூட்டணிப் பேச்சுவார்த்தை
கிட்டத்தட்ட கூட்டணிக்கான பேச்சுவார்த்தை போலவே இந்த சந்திப்பு இருந்தது. ஓ.பி.எஸ். வீட்டில் இச்சந்திப்பு நடந்தது. அதில் வாசனுடன் ஞானதேசிகன், சித்தன், விடியல் சேகர் ஆகியோரும், ஓ.பி.எஸ் தரப்பில், வேட்பாளர் மதுசூதனன், மா.பாண்டியராஜன், பொன்னையன், செம்மலை, நத்தம் விசுவநாதன், கே.பி. முனுசாமி ஆகியோரும் இருந்தனர்.
கிரீன்வேஸ் வீட்டில் வைத்து பேட்டி
பின்னர் ஓ.பி.எஸ்ஸின் கிரீன்வேஸ் வீட்டுக்குப் போன ஓ.பி.எஸ்ஸும், வாசனும் அங்கு வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசுகையில்தான் தனது புதிய கூட்டணி குறித்து பெருமிதம் தெரிவித்தார் வாசன்.
மக்கள் கூட்டணி
பேட்டியின்போது இது மக்கள் விரும்பும் கூட்டணி. மக்கள் எதிர்பார்த்த கூட்டணி, உள்ளாட்சி தேர்தலிலும் இது நீடிக்கும் என்று வாசன் புன்னகை பூக்க கூறியபோது வாசன் கட்சியினர் பெரும் மகிழ்ச்சி காட்டினர்.
மறக்க முடியுமா
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது இதே வாசனை, அதிமுக அலைக்கழித்தது இப்போது ஞாபகத்திற்கு வருகிறது. அப்போதும் அதிமுகவுடன் கூட்டணிக்காக கடுமையாக முயன்று பார்த்தார வாசன். ஆனால் ஜெயலலிதாவின் பிடிவாதத்தால் அது நடக்காமல் போய் விட்டது.
சின்னத்தால் சிதைந்த கூட்டணி
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுமாறு வாசன் கட்சியை அதிமுக நிர்ப்பந்தப்படுத்தியது. அதை ஏற்காத ஒரே காரணத்தால் கூட்டணி முறிந்தது. இன்று அதிமுகவே சின்னாபின்னமாகி விட்டது. சின்னத்தையும் இழந்து விட்டது. அதன் ஒரு பிரிவுடன்தான் தற்போது வாசன் முதல் ஆளாகப் போய் கூட்டணி சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.