அப்பாவின் ‘சைக்கிளுக்காக’ காத்திருக்கும் வாசன்... டவுட்டுதான் என்கிறார் ஞானதேசிகன்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கிடைப்பது சந்தேகம் தான் என அக்கட்சியின் துணைத்தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
கடந்த 1996-ம் ஆண்டு காங்கிரசில் இருந்து பிரிந்த ஜி.கே. மூப்பனார், தமிழ் மாநில காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். அப்போது கிடைத்த சைக்கிள் சின்னத்திலேயே அக்கட்சி போட்டியிட்டு வென்றது.
ரஜினி ஆதரவு அப்போது தமாகாவுக்குக் கிடைத்ததால் அண்ணாமலை படத்தில் ரஜினி சைக்கிளுடன் வரும் ஸ்டில்களைப் பயன்படுத்தி வாக்கு சேகரித்து லாபம் பார்த்தது தமாகா - திமுக கூட்டணி. பின்னர் மூப்பனாரின் மறைவிற்குப் பின் அக்கட்சி அவரது மகனான வாசன் கைக்கு வந்தது. கடந்த 2002ம் ஆண்டு தமாகாவைக் கலைத்து விட்டு மீண்டும் காங்கிரஸில் இணைந்தார் வாசன்.
இந்நிலையில் கடந்த லோக்சபாத் தேர்தலுக்குப் பின், உட்கட்சிப் பூசலால் காங்கிரஸில் இருந்து வெளியேறிய வாசன், மீண்டும் தமாகாவை தொடங்கினார்.
சைக்கிள் சந்தேகம் தான்...
முறையாகக் கலைக்கப்படாமல் இருந்ததால், மீண்டும் தமாகா என்ற பெயரைப் பெறுவதில் வாசனுக்கு சிக்கல் இருக்கவில்லை. ஆனால், தந்தை உருவாக்கிய கட்சியின் பழையப் பெயரைப் பெற்ற வாசனால், சைக்கிள் சின்னத்தைப் பெறுவது சுலபமான காரியமாக இல்லை.
மீட்டெடுக்க பெரும்பாடு...
இந்த நிலையில் வரும் மே மாதம் தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமாகா தனது பழைய சைக்கிளை மீட்டெடுக்க பெரும்பாடுபட்டு வருகிறது.
தேர்தல் ஆணையம்...
ஒரு மாநில கட்சியின் சின்னத்தை வேறு எந்த மாநில கட்சிக்கும் இனி ஒதுக்குவதில்லை என கடந்த 1997ம் ஆண்டு தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. எனினும் தமாகா இதற்கு முன்னரே தோன்றிய கட்சி என்பதால் பழைய சின்னத்தை மீண்டும் அளிப்பதில் அதற்கு தடையிருக்க வாய்ப்பில்லை.
சிக்கல்...
ஆனால் உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி, ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆகிய மாநில கட்சிகளும் சைக்கிளை தேர்தல் சின்னமாக பயன்படுத்தி வருகின்றன. இந்தக் கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சி தமிழகத்தில் வரும் தேர்தலில் போட்டியிட்டாலும் தமாகா.வுக்கு பழைய சின்னம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படும்.
தீவிர முயற்சி...
இந்நிலையில், சைக்கிள் சின்னத்தைப் பெறுவது சந்தேகம் தான் என தமாகாவின் துணைத் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ‘சைக்கிள் சின்னம் கிடைப்பது சிரமம் தான். ஆனால், சைக்கிள் சின்னத்தை பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். தேர்தல் கமிஷனிடம், எங்கள் கோரிக்கையை தெரிவித்து விட்டோம்.
தயக்கம்...
ஆந்திராவில் தெலுங்கு தேசம், உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாடிக்கு சைக்கிள் சின்னம் வழங்கப்பட்டு உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட சின்னத்தை மற்ற மாநிலங்களில் தரக்கூடாது என்ற விதி உள்ளதால், சின்னம் வழங்க தயங்குகின்றனர்.
கால அவகாசம் இல்லை...
கடந்த, 2004ல், தமாகாவின் சைக்கிள் சின்னத்தை, தேர்தல் கமிஷன் ரத்து செய்து விட்டது. தற்போது, மீண்டும் கேட்டுள்ளோம். நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். ஆனால், கால அவகாசம் இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம்' என அவர் தெரிவித்துள்ளார்.