கடவுளே வந்தாலும் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை காப்பாற்ற முடியாது: திமுக
சென்னை: கடவுளே வந்தாலும் இந்த தண்டனையில் இருந்து ஜெயலலிதாவை காப்பாற்ற முடியாது என்று திமுக மூத்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா 4 வருட சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து தீப்பளித்தார். இந்நிலையில் ஜெயலலிதா தரப்பு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக ஹைகோர்ட்டில் விரைவில் துவங்க உள்ளது.
சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வக்கீலாக ஆஜரான பவானிசிங், ஹைகோர்ட்டிலும் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியது. இதை அவரும் உறுதி செய்துள்ளார். இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் கர்நாடக ஹைகோர்ட் தலைமை நீதிபதி டி.ஹெச்.வகேலா மற்றும் கர்நாடக அரசின் தலைமைச் செயலாளர் கவுசிக் முகர்ஜி ஆகியோருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,
'அரசு வழக்கறிஞராக இருந்த பவானி சிங், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்று, சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள் என பலர் குற்றம்சாட்டி உள்ளனர். ஜெயலலிதா தரப்பு அரசு சாட்சியங்களை மறு விசாரணை செய்தபோது அதற்கு பவானி சிங் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தார். தன்னுடைய இறுதி வாதத்தைத் தொடங்காமல், உடல்நிலையைக் காரணம் காட்டி இழுத்தடித்தார். அதற்காக, நீதிபதி குன்ஹா அவருக்கு 65 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்தார்.
வழக்கு முடிந்து தீர்ப்புக்கு வரும் நேரத்தில், இறந்துபோன பாஸ்கரன் என்கிற சாட்சியை மறு விசாரணை செய்ய வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தார். எனவே பவானிசிங்க்ை ஹைகோர்ட்டில் அரசு வக்கீலாக செயல்பட அனுமதிக்க கூடாது' என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில் திமுக மூத்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.பாரதி, விகடன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நேர்மையாக நடக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அதனால் நாங்கள் அதில் தலையிட வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தோம். அதேசமயத்தில் பவானி சிங் போன்றவர்கள் அரசு வழக்கறிஞராக வந்து, ஏதேனும் குழப்பத்தை ஏற்படுத்தினால், நாங்கள் நிச்சயம் அதில் தலையிடுவோம். நாங்கள் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை ஜெயலலிதா தரப்புத்தானே எப்போதும் தீர்மானிக்கிறார்கள்.
'குன்ஹா வழங்கிய தீர்ப்பு ஏனோ தானோவென்று வழங்கப்பட்ட தீர்ப்பு அல்ல. முழுக்க முழுக்க ஆவணங்களை பரிசீலித்து, ஆதாரங்களையும் அதில் உள்ள கணக்கு வழக்குகளையும் ஆராய்ந்து சொல்லப்பட்ட தீர்ப்பு. ஜெயலலிதாவுக்குச் சாதகமான விஷயங்களையும் அவர் பரிசீலித்து பல குற்றச்சாட்டுகளை ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தள்ளுபடியும் செய்துள்ளார். எந்தவகையிலும் தள்ளுபடி செய்ய முடியாத குற்றச்சாட்டுகளில்தான் தற்போது ஜெயலலிதா தண்டனை அனுபவித்து வருகிறார். கடவுளே வந்தாலும்கூட இந்த தண்டனையில் இருந்து ஜெயலலிதாவைக் காப்பாற்ற முடியாது என்பது மூத்த வழக்கறிஞராக என்னுடைய கருத்து. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.