2 அறை வீடு, பேருந்தில் பயணம், 'நோ' டி.வி.: இது தான் சுந்தர் பிச்சையின் குழந்தைப் பருவம்
சென்னை: கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை சிறு வயதில் பண வசதி இன்றி இருந்ததாக ப்ளூம்பெர்க் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
கூகுள் நிறுவன சிஇஓவாக தமிழரான சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். சுந்தர் பிச்சையின் சொந்த கதையும் சினிமா கதை போன்று தான் உள்ளது. வறுமையில் வாழ்ந்த அவர் தனது படிப்பால் உயர்ந்த நிலைக்கு வந்துள்ளார்.
இது குறித்து ப்ளூம்பெர்க் பத்திரிக்கையில் கூறியிருப்பதாவது,
பெற்றோர்
பிச்சை சென்னையில் பிறந்து வளர்ந்தவர். அவரது தாய் குழந்தைகள் பெறும் வரை ஸ்டெனோகிராபராக பணியாற்றியுள்ளார். அவரது தந்தை ரகுநாத பிச்சை ஜிஇசி நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் என்ஜினியராக இருந்தவர்.
சுந்தர்
நான் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்ததும் அன்றைய நாள் வேலை பற்றியும், நான் சந்தித்த சவால்கள் பற்றியும் சுந்தரிடம் தெரிவிப்பேன். சிறுவனாக இருக்கையிலேயே அவனுக்கு எனது வேலை பற்றி கேட்க பிடிக்கும். அது தான் அவனை தொழில்நுட்பத்தின் பக்கம் ஈர்த்துள்ளது என்று நினைக்கிறேன் என ரகுநநாத பிச்சை தெரிவித்துள்ளார்.
வீடு
சுந்தர் அவரது தம்பி, பெற்றோர் ஆகியோர் இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் வசித்துள்ளனர். சுந்தரும், அவரது தம்பியும் ஹாலில் தூங்கியுள்ளனர். சுந்தர் சிறுவனாக இருக்கையில் அவரது வீட்டில் டிவியோ, காரோ இல்லை.
பேருந்து
சுந்தர் சிறுவனாக இருக்கையில் எங்கு சென்றாலும் அரசு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டில் லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர் மட்டுமே இருந்துள்ளது. அந்த ஸ்கூட்டரில் நான்கு பேரும் பயணித்துள்ளனர்.
தொலைபேசி
சுந்தருக்கு 12 வயது இருக்கையில் தான் அவர்களின் வீட்டில் தொலைபேசி வாங்கியுள்ளனர். எந்த நம்பரை டயல் செய்தாலும் அதை அவரின் நினைவில் வைத்துள்ளார்.
கடன்
சுந்தர் மேல்படிப்பிற்கு அமெரிக்கா செல்லத் தேவையான விமான டிக்கெட் உள்ளிட்டவற்றுக்காக அவரது தந்தை கடன் வாங்க முயன்றும் கிடைக்கவில்லை. இதனால் அவர் அவசரத் தேவைக்காக சேரத்து வைத்திருந்த பணத்தில் இருந்து எடுத்துக் கொடுத்துள்ளார்.
தியாகம்
எனது தந்தையும், தாயும் எங்களுக்காக அவர்களின் வாழ்க்கையில் பலவற்றை தியாகம் செய்துள்ளனர். நானும், என் தம்பியும் நன்றாக படிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர் என்று சுந்தர் தெரிவித்துள்ளார்.