வாணியம்பாடி மஜக நிர்வாகி கொலை வழக்கு: 3 பேர் மீது குண்டாஸ்... 21 பேர் மீது குற்றப்பத்திரிகை
வாணியம்பாடி: வாணியம்பாடியில் மனித நேய ஜனநாயகக் கட்சி முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் செப்டம்பர் மாதம் 10ம் தேதி மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் நிர்வாகியும் சமூக ஆர்வலருமான வசீம் அக்ரம் 8 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.
வழக்கில் இதுவரையில் 21 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் வேலூர் மற்றும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வழக்கில் கைதானவர்களில் இதுவரை 8 பேர் குண்டர் சட்டத்தில் கைதான நிலையில் மேலும் 3 பேர் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது.

மஜக முன்னாள் பிரமுகர் படுகொலை
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் சமூகநல ஆர்வலரும் மஜகவின் முன்னாள் மாநில துணை செயலாளருமான வசீம் அக்ரம் செப்டம்பர் 10ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். தொழுகை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த அவரை 8 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்தது. பின்னர் அவரை சாலையில் ஓட ஓட விரட்டி பொதுமக்கள் முன்னிலையிலேயே கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது. பின்னர் வசீம் அக்ரமின் தலையை துண்டித்து எடுத்து கொண்டு தலைமறைவானது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

போலீசுக்கு தகவல் சொன்னதால் கொலை
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வாணியம்பாடி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தியும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதை சுட்டிக் காட்டியதால் படுகொலை நடைபெற்றதாக தெரியவந்தது. ஜீவா நகரில் வசிக்கும் இம்தியாஷ் என்பவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதும், இதனை வசீம் அக்ரம், காவல் துறைக்கு தகவல் கொடுத்ததாலும், காட்டிக்கொடுத்த ஆத்திரத்தில் இம்தியாஷ் கூலிப்படையை வைத்து வசீம் அக்ரமை கொலை செய்ததும் தெரிய வந்தது.

21 பேர் சிறையில் அடைப்பு
இதை அடுத்து கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஓட்டேரி பகுதியை சேர்ந்த பிரசாந்த் (எ) ரவி, டில்லி குமார் ஆகிய 2 பேரை காஞ்சிபுரம் பாலுசெட்டிசத்திரம் காவல் நிலைய போலீஸார் கைது செய்திருந்தனர். அதன் பின்னர், முக்கிய குற்றவாளியான இம்தியாஷ் அவரது கூட்டாளியான பைசல் அஹமத், காலு என்கின்ற தாஸ்தகீர், நயீம், செல்வா என்கின்ற செல்வகுமார், மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த சத்தியா (எ) சத்திய சீலன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். வழக்கில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

11 பேர் குண்டாஸில் கைது
வசீம் அக்ரம் கொலை வழக்கில் இதுவரை 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இது தவிர செய்யூர் பகுதியை சேர்ந்த தோட்டா மணி என்கின்ற மணிகண்டன், ஓட்டேரியை சேர்ந்த முனீஸ்வரன், பிரவீன் குமார் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் பரிந்துரை செய்தார். இதையடுத்து அவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 11 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி வசிம் அக்ரம் கொலை வழக்கு தொடர்பாக 21 பேர் மீதும நகர போலீசார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளனர்.











Click it and Unblock the Notifications