துணை ஜனாதிபதி தேர்தல்.. கருணாநிதி, ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார் கோபால கிருஷ்ண காந்தி
சென்னை: துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் கோபால கிருஷ்ண காந்தி, திமுக தலைவர் கருணாநிதி, அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.
துணை ஜனாதிபதியாக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் ஆகஸ்டில் முடிவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து அப்பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அன்று மாலையே தேர்தல் முடிவுகளும் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் உள்பட 18 எதிர்கட்சிகள் சார்பில் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக கோபால கிருஷ்ண காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசியல் தலைவர்களை சந்தித்து தனக்கு ஆதரவு அளிக்குமாறு கோபால கிருஷ்ண காந்தி கேட்டு வருகிறார். அந்த வகையில் இன்று மாலை சென்னை வந்த அவர், திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.
திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினையும் நேரில் சந்தித்து கோபால கிருஷ்ண காந்தி ஆதரவு கோரினார். இந்த சந்திப்பின்போது திமுக மாநிலங்களவை உறுப்பினர்களான கனிமொழி, திருச்சி சிவா மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.