சட்டசபையை கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும்.. ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல்
சட்டசபையை கூட்டி ஜனநாயகத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவ் காப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்தார்.
திருவாரூர்: சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்தார்.
அதிமுக இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் எடப்பாடிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநரிடம் க
டிதம் கொடுத்துள்ளனர்.
இதனால் எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதால் முதல்வர் தனது பெரும்பான்மையை சட்டமன்றத்தில் கூட்டி நிரூபிக்க வேண்டும் என்று முக ஸ்டாலின் ஏற்கெனவே ஆளுநரிடம் மனு அளித்துள்ளார்.
இந்த பரபரப்பான சூழலில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் சென்னை வந்துள்ளார். அவரை சந்திக்க நேரம் திமுக நேரம் கேட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூரில் முக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 19 எம்எல்ஏக்கள் கடிதம் கொடுத்ததுமே ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டிருக்க வேண்டும்.
ஆளுநர் தாமதம் செய்வதால் குதிரை பேரம் நடக்கிறது. திமுகவும், பிற சில எதிர்க்கட்சிகளும் ஏற்கெனவே ஆளுநருக்கு கடிதம் எழுதி பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிட கோரினோம். திமுக சார்பில் துரைமுருகன் மற்றும் எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்.
இன்று மாலை அல்லது நாளை காலை ஆளுநரை நேரில் சந்திக்க முடியும் என நம்புகிறேன். சட்டசபையை ஆளுநர் உடனே கூட்ட உத்தரவிட்டு ஜனநாயகத்தை காக்க வேண்டும். புதிதாக அதிமுகவை சேர்ந்த மேலும் பல எம்எல்ஏக்களும் ஆட்சிக்கு ஆதரவு இல்லை என கூறுவதாக ஊடகங்களில் செய்தி வருகின்றன என்றார் முக ஸ்டாலின்.