ஆளுநர் வித்யாசாகர் ராவின் தமிழக வருகை ரத்து?
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் வித்யாசாகர்ராவின் இன்றைய தமிழக வருகை ரத்தாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: சசிகலாவிற்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதற்காக மகராஷ்ட்ராவில் இருந்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் இரு தினங்கள் கழித்தே சென்னை வருவார் என்று கூறப்படுகிறது.

முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர் செல்வம், இரண்டு நாட்கள் அமைதிக்குப் பிறகு நேற்றிரவு மெரீனா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடம் முன்பு அமர்ந்து தியானம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர் என்று கூறினார். இதனையடுத்து அரசியல் களம் பரபரப்படைந்தது. இந்த நிலையில் விடிய விடிய போயஸ் தோட்டம், கிரீன்வேஸ் சாலையில் மக்கள் கூட்டமும், அரசியல்வாதிகள் கூட்டமும் அலைமோதியது.
தமிழக அரசியல் களம் ஒருநாள் இரவில் மாறிப்போனது. ஜெயலலிதா மறைந்து 65 நாட்களுக்குள் தனக்குள் இருந்த அழுத்தங்களை கொட்டி தீர்த்து விட்டார் ஓ.பன்னீர் செல்வம். இதனால் சசிகலா முதல்வராக பதவியேற்பதில் சிக்கல் உருவாகும் என்று கூறப்பட்டது.
ஓ.பன்னீர் செல்வத்தின் கலகக்குரலால் கட்சிக்குள் கலகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதே நேரத்தில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவின் வருகை ரத்தாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளுநர் வருகை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications