மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க “மொபைல் ஊர்திகள்” - உளவியல் ஆலோசனை துவக்கம்
சென்னை: மழை வெள்ளப்பாதிப்புக்கு ஆளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை, பள்ளிக்கல்வி துறை சார்பாக நேற்று முதல் வழங்கப்படுகிறது.
மற்ற மாவட்டங்களை விட இந்த 4 மாவட்டங்களில்தான் கடுமையான பொருட்சேதம் ஏற்பட்டதோடு மாணவர்களின் பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பள்ளி திறந்தவுடன் பாடப்புத்தகம், நோட்டு புத்தகம் மற்றும் ஒரு செட் சீருடை போன்றவை வழங்கப்பட்டன.
நடமாடும் கவுன்சிலிங்:
மேலும் மாணவர்கள் மனஅழுத்தம், மன உளைச்சலில் இருந்து விடுபட மன நல ஆலோசனையும் வழங்கப்படுகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ள பாதிப்புக்கு ஆளான பள்ளி மாணவர்களுக்கு நடமாடும் வாகனங்களில் சென்று உளவியல் ஆலோசகர்கள் கவுன்சிலிங் வழங்கி வருகின்றனர்.
10 ஆயிரம் மாணவர்களுக்கு:
10 நடமாடும் உளவியல் ஆலோசனை குழுக்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறது. சென்னை மாவட்டங்களில் 4 நடமாடும் குழுக்களும், திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் மாவட்டங்களுக்கு தலா 2 வாகனங்கள் வீதம் 6 நடமாடும் குழுக்களும் சென்றுள்ளன. நேற்று ஒரே நாளில் மட்டும் 10 ஆயிரம் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த கவுன்சிலிங் 18 ஆம் தேதி வரை நடக்கிறது.
1 கோடி ரூபாய் ஒதுக்கீடு:
மாணவர்களுக்கு மொத்தமாகவும், தேவைப்படும் மாணவர்களுக்கு தனியாகவும் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
மாணவர்கள் வெள்ள பாதிப்பு பயத்தில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பவும் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற, கவலைப்படாமல் படிக்கவும் அவர்கள் ஆலோசனை வழங்கினார்கள். மேலும் இந்த பணியில் ஈடுபடுத்த 7 வாகனங்கள் புதிதாக வாங்க ரூபாய் 1 கோடியே 1 லட்சம் அரசு நிதி ஒதுக்கியுள்ளது.