வாணியம்பாடி சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகள் தடுத்து நிறுத்தம்: அடித்து நொறுக்கிய பயணிகள்
வேலூர்: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நெக்குந்தி மற்றும் பள்ளிக்கொண்டா சுங்கச்சாவடிகளில், தமிழக அரசுப் பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டன. போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சுங்கச்சாவடி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
சேலம், விழுப்புரம் கோட்டங்களைச் சேர்ந்த அரசுப் பேருந்துகள், வாணியம்பாடியை அடுத்துள்ள நெக்குந்தி சுங்கச்சாவடி வழியாக, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் பெங்களூருவுக்கு இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், மாதம் ஒரு முறை செலுத்தும் சுங்கக் கட்டணத்தை கட்டவில்லை எனக்கூறி, அரசுப் பேருந்துகளை சுங்கச்சாவடி அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். 22ம் தேதி வரை அவகாசம் அளித்தும் கட்டணத்தை செலுத்தாததால், பேருந்துகளை நிறுத்தியதாக அவர்கள் கூறினர்.
இதனால் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இன்று காலை 10 மணி வரை பேருந்துகள் இயக்கப்படவில்லை. பேருந்தில் சென்ற மாணவர்கள் மற்றும் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
இதே பிரச்னை காரணமாக, வாணியம்பாடி சுங்கச்சாவடியிலும் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
இதையடுத்து, பெங்களூரு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மீண்டும் அப்பாதையில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
இந்த சம்பவத்தால் பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பலமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.