ரிசர்வ் வங்கி புதிய ஆளுநர் பதவிக்கு அருந்ததி பட்டாச்சார்யா உட்பட 4 பேர் பரிசீலனை
சென்னை: ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) புதிய ஆளுநர் பதவிக்கு 4 பேரின் பெயர்களை இறுதிக்கட்டப் பரிசீலனைக்கு மத்திய அரசு எடுத்துக் கொண்டுள்ளது. ஆர்பிஐ துணை ஆளுநர் உர்ஜித் படேல், முன்னாள் துணை ஆளுநர்கள் ராகேஷ் மோகன், சுபீர் கோகர்ன், பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா ஆகியோரது பெயர்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜனின் பதவிக் காலம் வரும் செப்டம்பரில் நிறைவடையவுள்ளது. அவரது பதவிக் காலம் நீட்டிக்கப்படலாம் என்று பரவலாக செய்திகள் வெளியாகின.
ஆனால் ரகுராம் ராஜனின் செயல்பாடுகள் குறித்து ஆளும் கட்சியான பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்தார். இதனால் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை மீண்டும் வகிக்கப் போவதில்லை என்று ரகுராம் ராஜன் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் ரிசர்வ் வங்கிக்கு புதிய ஆளுநரை நியமிப்பது தொடர்பான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில், அடுத்த ஆளுநருக்கான தேர்வில் உர்ஜித் படேல், ராகேஷ் மோகன், சுபீர் கோகர்ன், அருந்ததி பட்டாச்சார்யா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் எஸ்பிஐ வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவுக்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்தான் ஆஸ்திரேலியாவுக்கு சென்று பிரதமர் மோடிக்கு நெருக்கமான அதானி குழுமத்துக்கு ரூ6,000 கோடி கடன் கொடுக்க காரணமானவர்... மத்திய பாஜக அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்கக் கூடியவர் என்பதால் அருந்ததி பட்டாச்சார்யா அடுத்த ரிசர்வ் வங்கி ஆளுநராக்கப்படலாம் என கூறப்படுகிறது.